வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?
|
1
|
வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட , அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே ! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே ! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே ! கபாலி என்னும் பெயரையுடையவராய் , மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே ! நீர் மதுரையம் பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றா யுள்ளது . | |
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?
|
2
|
பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு , சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே ! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே ! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே ! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ . | |
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?
|
3
|
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! நீரே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர் . ஆதலால் எனது குற்றமும் நீரே ; குணமும் நீரே ; என் சுற்றமும் தலைவரும் நீரே . என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை நீக்கி அறிவொளி தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே . பொதுவும் , சிறப்புமாகிய வேத , ஆகம நூல்களில் கருத்தும் நீரே . நூல்களில் உட்பொருளை அடியேன் நனிவிளங்கச் செய்பவரும் , அவ்விளக்கத்தால் இன்பம் அடையச் செய்பவரும் நீரே . உம் திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது உண்மையேயன்றி வெறும் புகழ்ச்சியன்று . | |
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!
மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்!
சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே!
|
4
|
மதுரை என வழங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே ! தூயகங்கையைச் சடைமுடியில் தாங்கிய முதல்வன் நீ . சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று நிலமதிர ஆடுபவன்நீ . அழகன் நீ . பாம்பை ஆபரணமாக அணிந்தவன் நீ . வரம்பில் இன்பம் உடையவன் நீ . மணவாளன் நீ . மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ . சாமர்த்தியமுடையவன் நீ . பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும் சிவபிரான் நீ . | |
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.
|
5
|
அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே ! மார்க்கண்டேயர் , சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து பண்டைக் காலத்தும் , இக்காலத்தும் வழிபட விளங்கும் நீலகண்டனே . தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர் . | |
| Go to top |
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.
|
6
|
பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி பின்னால் தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே ! தலைக்கோலம் உடையவரே ! பிறப்பற்றவரே ! கொன்றைமாலை சூடிய முடி உடையவரே ! நான்மாடக் கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! உம் ஒளிமயமான திருநடனத்தை நினைத்து இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய நியமம் ஆகும் . | |
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?
|
7
|
உலகத் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! பேரொளிப் பிழம்பாக விளங்குபவரே ! பெருஞ்சோதிக்குள் சோதியாய் ஒளிர்பவர்நீர் . உபதேச வழியாகச் சிவஞானம் பெற்ற பக்குவமுடைய ஆன்மாக்களுக்கு அல்லாமல் ஏனைய அபரஞானமாகிய கல்வி அறிவுடையோர்க்கு உம் அருட்பண்பை உணர்தற்கும் , உரைப்பதற்கும் இயலுமோ ? | |
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
|
8
|
விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே ! கரிய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள் நொறுங்கும்படி திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே ! வேதங்களிலுள்ள பாடல்களால் போற்றப்படுபவரே ! மதுரையிலுள்ள திருஆலவாயில் வீற்றிருந்தருளுபவரே ! மனத்தை ஒரு வழியே நிறுத்தி உம்மை நினைப்பதே உய்தற்குரிய நியமமாகும் . | |
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்
கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்!
தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின்
தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே
|
9
|
தாவிச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவரே ! தலைமை உடையவராய் நாடொறும் கோவண ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே ! நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் , உம் முழுமுதல் தன்மையை அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள் . | |
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும்
போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா
கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே?
|
10
|
தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும் , சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத் தேடிக்கொள்ளாதவராயினர் . காலனை மார்க்கண்டேயர்க்காக உதைத்த திருவடிகளை உடையவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ ? | |
| Go to top |
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-
பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால்,
ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.
|
11
|
நீர்வளம் தரும் , ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற சீகாழியில் அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன் இறைவனுடைய நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல் மாலையை ஓதித் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவ பெருமானை வழிபடுபவர்கள் தீமைகள் நீங்கப்பெற்று நற்சிந்தையுடைய தேவர்களாவர் . | |
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|