சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவொற்றியூர் - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி ராகத்தில் திருமுறை அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Nhr4gstwUT4   Add audio link Add Audio

விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

1
சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன் . விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி , சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,
ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

2
பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி;
அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

3
ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

4
சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே,
அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு, முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

5
கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
Go to top

கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப,
சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும்
சோமனையும்;
அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு இலங்க,
உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

6
பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,
பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

7
உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும் , பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர் . நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான் உரி-தோல்
சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க,
தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

8
பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,
பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

9
இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் , திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன் மின்! ஏழ் உலகும்
ஓகை தந்து ஆள வல்லான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

10
நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
Go to top

ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.

11
ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவொற்றியூர்
3.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
Tune - பஞ்சமம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
Tune - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து
Tune - திருநேரிசை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
Tune - திருவிருத்தம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
5.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒற்றி ஊரும் ஒளி மதி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
6.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
Tune - திருத்தாண்டகம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.054   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழுக்கு மெய் கொடு உன்
Tune - தக்கேசி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.091   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
Tune - குறிஞ்சி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
11.030   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது   திருவொற்றியூர் ஒருபா ஒருபது
Tune -   (திருவொற்றியூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000