சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=3ZbtFcwzvZ0   Add audio link Add Audio

ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

1
சிவபெருமான் , மேன்மேலும் ஒங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர் . இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர் . முறைப்படி , பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் , நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர் . அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

2
சிவபெருமான் , புதர்ச்செடிகள் நிறைந்த சுடு காட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர் . விளங்கும் ஒளி யுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர் . வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர் . மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர் . இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருள்பவர் .

மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்
கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

3
குளிர்ச்சியான இளம்பிறையும் , கொன்றை , ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது , கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர் . அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை யணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில் , மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார் . அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார் .

கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

4
இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகை யாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர் . வண்டுகள் மொய்க்கும் , தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர் . அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தல மாகும் . அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும் .

வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல்,
கபாலியார்தாம்,
துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

5
அழகு மிளிரும் சந்திரனும் , பொன் போன்ற கொன்றைமலரும் , வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய , நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர் . அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர் . அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .
Go to top

பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு
அரியார்
மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

6
சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர் . நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர் . பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்ட தன்மையர் . இத்தகைய எளிமை உடையவர் ஆயினும் , எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர் . மான்கன்று ஏந்திய கையினர் . அத்தகைய பெருமான் உமாதேவியாரோடு பகலில் , நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார் .

புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

7
சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர் . புலியின் தோலை அரையில் உடுத்தவர் . திருவெண் நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர் . திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர் . சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

8
நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் ` இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் ` என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான் . அவர் பூணூல் அணிந்த திருமார்பினர் . அவர் உமா தேவியோடு பகலில் , விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார் .

கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும்,
குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான்,
வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

9
ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை , செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான் . அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்,
நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

10
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும் , குண்டர்களாகிய புத்தர்களும் , இன்முகத்தோடு நயமாகப் பேசி , நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள் . ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர் . கயல்மீன் போன்ற , அழகிய , வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுகின்றார் . அவரை வழிபட்டு உய்வீர்களாக .
Go to top

விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி,
வேள்விக்குடியும்,
ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.

11
ஒளிவிடும் , ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற , ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த , மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி , திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும் , பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும் , பாவமும் இல்லாதவர்களாவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
3.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
Tune - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.018   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
Tune - நட்டராகம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.074   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
Tune - காந்தாரம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000