சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநெல்வேலி - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3  https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas   Add audio link Add Audio

மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்-
செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

1
நல்ல நெஞ்சமே ! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக . அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும் . மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும் . மறுமையில் நற்கதி தரும் . மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும் . போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும் . அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க , நெருங்கியுள்ள , பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார் .

என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச்
சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்பு அதுவே
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

2
நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து , செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர் . அவர் இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர் . அவரை வழிபடுவீர்களாக .

பொறி கிளர் அரவமும், போழ் இளமதியமும், கங்கை என்னும்
நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி,
கிறிபட நடந்து, நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும்
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

3
புள்ளிகளையுடைய பாம்பையும் , ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவளையும் சடைமீது சுற்றி அணிந்து , வெண்மையான திருநீற்றைப் பூசி , பிறர் மயங்கும் வண்ணம் நடந்து , நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான் , நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட் செல்வர் ஆவார் . அவரை வழிபடுவீர்களாக .

காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும்,
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

4
நெருங்கிய பெரிய மாடங்களிலும் , மாளிகைகளிலும் , மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திரமண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான் , தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும் , பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர் . அவரை வழிபடுவீர்களாக .

ஏன வெண் கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள அரவும்,
கூனல் வெண் பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல் உடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள்
தேனில் வண்டு அமர் பொழில்-திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

5
தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன் , அழகிய ஊமத்த மலரையும் , இளம் பாம்பையும் , வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் , அணிந்த சடைமுடி உடையவர் . கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர் . பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , கோசலம் , கோமயம் , ஆகிய பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர் . அரிய வேதங்களை அருளியவர் .
Go to top

வெடி தரு தலையினர்; வேனல் வெள் ஏற்றினர்; விரி சடையர்
பொடி அணி மார்பினர்; புலி அதள் ஆடையர்; பொங்கு அரவர்;
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல் செய்வார்
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

6
புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் , மண்டையோட்டை மாலையாக உடையவர் . சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . விரிந்த சடையுடையவர் . திருவெண்ணீறு அணிந்த மார்பினர் . புலித்தோலாடை அணிந்தவர் . கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர் , அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் . தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர் . அவரை வழிபடுவீர்களாக .

அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்; அடிகள்; அன்று,
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

7
வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற சோலைகளையுடைய , எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய சிவபெருமான் , சங்குமணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர் . அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய தலைவர் . அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த திறமையையுடையவர் . செவ்வொளி படரும் சடையினர் . அவரை வழிபடுவீர்களாக .

முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே
உந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

8
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற , பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான் , பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும் , தோள்களும் நெரியும் வண்ணம் , சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார் . அவரை வழிபடுவீர்களாக .

பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது
அங்கணா! அருள்! என அவர் அவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

9
பசுமையான , வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலுடன் , குளிர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற்பொருளான இறைவனைக் காணமுடியாமல் , அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம் விளங்கும் சிவ பெருமானே , அந்தணர்கள் ஒன்றுகூடி நால் வேதங்களைப் பாடவும் , பெண்கள் நடனமாடவும் , மாத விழாக்களும் , நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராவார் . அவரை வழிபடுவீர்களாக .

துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர், என்னும்
அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்
கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல,
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

10
மருதந்துவரில் தோய்த்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும் , வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள் . எம் தலைவராகிய சிவபெருமான் , கண்டார் மனங்களைக் கவர்கின்ற , கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட , அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற , சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார் . அவரை வழிபடுங்கள் .
Go to top

பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.

11
பெரிய , குளிர்ந்த , சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட , சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி , பொருந்திய நீர்நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட , போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநெல்வேலி
3.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவை; மந்திரம், மறுமை
Tune - சாதாரி   (திருநெல்வேலி )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000