திருவாரூர் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி திருப்பழனத்திலிருந்து திருநல்லூர், வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திரு வாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து பாடிளம் பூதத்தினானும் என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார்.
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.
ஆரூரில் உகந்தருளியிருக்கும் பெருமான், பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும், சிவந்த வாயினை உடையவனும், பவளம் போன்ற உடல் நிறத்தினாலும், தன் உடம்பின் பாதியாக இணைந்த பார்வதியைக் கூடியதால் ஏற்பட்ட விசேட அழகினனும், வானில் உலவக்கூடிய வெண்பிறையைச் சூடியவனும், ஒளிவிளங்கும், சூலப்படையை உடையவனும் ஆடுகின்ற இளைய பாம்பினைக் கட்டிக் கொண்டவனும் ஆவான்.
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்,
விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும்,
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
நரியைக் குதிரையாக மாற்றும் அகடித கடநா சாமர்த்தியம் உடையவனும், நரகர்களையும் தேவர்களாக்க வல்லவனும், அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானுக்கு உரிய முரசம் தன் மீது அமர்த்தி முழங்கப்பட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட, தன் முன்னர் நின்று வணங்கி அன்பர்கள் துதிக்கப் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூரை உகந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆவான்.
குயிலை ஊதுகொம்பாக உடைய சிறந்த இளவேனிற்காலத்திற்கு உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும், நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும், நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான். இது மொழி மாற்றுப் பொருள்கோள்.
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்;
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்;
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்;
அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
தொழுவதற்கு உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கும் அடியவர்கள் மனக்கண்முன் தோன்றி அருள் செய்ய வல்லவனும், தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு உள்ளங்கைகளிற் பல பூக்களையும் கொண்ட அடியார்களுக்கு அன்புமிகுமாறு நிற்பவனும், கூந்தலை உடைய கங்கையை அழகிய சடையில் வைத்து மறைத்தவனும், தீயினைத் தாங்கத் தன் உள்ளங்கையை நீட்டி ஏற்று ஏந்தும் ஆற்றல் உடையவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும், ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்,
காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து
ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
முத்தி உலகை ஞான ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும், தன் முடியைக் காண்பதற்குப் பிரமன் வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், பல ஊழிக் காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் தன்னை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.
பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
படமெடுக்கும் அழகிய ஒளியை வெளிப்படுத்துகின்ற பாம்பில் பள்ளி கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும், இருபது கைகளை உடைய இராவணனைத் தன் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனும், பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்வானும், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்து நிற்பவனும் ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.