நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
|
1
|
`திருவதிகை வீரத்தானத்தில் உகந்தருளியிருக்கும் பெருமானீரே ! எல்லாராலும் விரும்பப்படுகிறவரே ! எங்கள் அரசரே ! ஆதிமூர்த்தியாகிய பார்வதிபாகரே ! மேம்பட்டயோகீசுவரே ! பொன்னையும் பவளமலையையும் ஒத்தவரே ! அன்பரே !` என்று உம்மைப் பலகாலும் வாய்விட்டழைத்து உமது தாமரை மலர் போன்ற பாதங்களைத் காணத் துயருற்று அடியேன் வருந்துகின்றேன் . | |
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
|
2
|
அழியக்கூடிய பொய்ப்பொருள்களால் இணைத்துச் செய்யப்பட்ட உடம்பில் ஒவ்வொரு துவாரமும் செயற்பாடின்றி அழுகிக்கெட , உண்மையான வாழ்வு வாழ இயலாதேனாய் , யான் விரும்பிய ஒப்பற்ற பரஞானத்தை என் ஐம்பொறிகளும் தாமும் விரும்பாமல் இடர்ப்படுதலால் , அதிகை வீரட்டனாராகிய உமது சிவந்த தாமரையை ஒத்த திருவடிகள் இரண்டையும் காண்பதற்கு இயலாமல்அடியேன் வருந்தி நிற்கின்றேன் . | |
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
|
3
|
ஒளியே ! ஞானவிளக்கே ! அதிகைப்பெருமானே ! தூயேன் அல்லேனாகிய அடியேன் நாடோறும் நெறிப்படி வாழமாட்டாமல் , கற்றும் கற்றவாறு உணர இயலாதேனாய் , உன்னை உள்ளத்துள் நிலையாக வைத்துத் தியானிக்க இயலாதேனாய் முதற்கடவுளாகிய உன்னுடைய தூயமலர்களைப் போன்ற திருவடிகளைக் காண இயலாதேனாய் வருந்தி நிற்கிறேன் . | |
தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்;
இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான்
அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!
|
4
|
இருண்ட நீலமணி போன்ற கழுத்தை உடைய அதிகைப் பெருமானே ! தெளிவடையும் வழியை அடைந்து மனந் தெளிவடைதலை இல்லேனாய் , தீயவினைகளுக்கு உதவும் தேக பந்துக்கள் என்னும் பொருள்களோடு இயைந்து நாளும் செல்லத்தக்க மேம்பட்ட வழியை அறியேனாய் உள்ள அடியேன் உன் ஒன்றற்கு ஒன்று ஒப்பான உன் திருவடிகள் இரண்டனையும் தரிசிக்குமாறு அருளும் வகையால் அருளவேண்டும் . | |
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே!
|
5
|
பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே ! ஐம்பூதங்களால் இயற்றப்பட்ட இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக , அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன் . | |
| Go to top |
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!
|
6
|
கயிறாகிய ஊஞ்சல் போலப் பிறைச் சந்திரன் அசைந்துகொண்டு தங்கியிருக்கும் சடையினைஉடைய அதிகைப் பெருமானே ! தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்துசேரும் ஊசற்கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கே வரும் நெஞ்சம் , கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய் தரையேயாதல் போல , இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும் இயல்பைப்பெற்றுள்ளேன் ஆயினேன் . | |
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!
|
7
|
அதிகைப் பெருமானே ! என்னிடத்துள்ள ஆசாபாசம் , காமம் என்ற கொடியநோய் நீங்கப்பெற்றிலேனாய் ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய் , உடலுயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருத்தலால் , அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக , விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன் . அதற்குத் தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன் . அதே வேளை , இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவுடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன் . நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு . | |
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!
|
8
|
ஊர்ப் பொதுமன்றத்தில் நிற்கும் புன்னை பலராலும் கல்லெறியப்பட்டும் ஏறி அலைக்கப்பட்டும் சதா வருந்துவதுபோல ஐம்பொறிகளால் சதா அலைக்கப்பட்டும் வருந்துவதன்றி ஒருவகையிலும் உண்மையை உணரமாட்டேன் . அதை உணர்விக்கவல்ல உன்னையும் உளத்தில் நிலையாக வைக்கமாட்டேன் . இந்நிலையில் , சினம்மிக்க எமன் வந்து என்னை மீளவும் பிறப்பில் தள்ளுதற்கு அணுகிக் கொண்டுள்ளான் . அது கண்டு நான் சுழன்று போனேன் அதிகை வீரட்டத்துப் பெருமானே . | |
பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே!
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்;
துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே!
|
9
|
காளையை ஊர்பவனே ! அதிகைப்பெருமானே ! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன் , செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு , அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மனஉறுதியும் இல்லாதேனாய் , அத்தூய்மை துணிவு என்பனவற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன் . | |
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான்,
அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!
|
10
|
அதிகை வீரட்டனே ! வடிவம் புலப்படாது இருப்பவனே ! திருமகள் கேள்வனாய திருமாலும் , நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும் , திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும் . | |
| Go to top |