நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.
|
1
|
நம்மால் விரும்பப்படுபவனாய் , மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய் , அமுதனாய் பேரின்ப பெருக்காறாய் , அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய் , ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன் . ( ஆறு - நெறி எனலுமாம் .) | |
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்;
அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து;
பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!
|
2
|
கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே ! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன் . | |
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர்,
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை,
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே!
|
3
|
பார்வதி பாகரான இளையராய் , ஒற்றை மழுப் படையை ஏந்தியவராய் , வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய் , இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும் தலைவராகும் உயர் நிலையினராவர் . | |
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!
|
4
|
பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய் , பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து , தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய் , இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன் . | |
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி,
கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம்
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை,
கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.
|
5
|
மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய் , கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய் , தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி , ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும் . | |
| Go to top |
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள்
அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும்
திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!
|
6
|
சிவபுண்ணியப் பேற்றை அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய் , எங்கள் அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய் , தேவர்கள் போற்றும் செல்வமாய் , திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப் பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய் , உள்ள சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன் . | |
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன்,
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்,
எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை,
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.
|
7
|
தான் விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய் , உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன் . | |
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி,
கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம!
இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!
|
8
|
படத்தை உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி , மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு , செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினை யிலிருந்து பிழைத்தது . இது வியக்கத்தக்கது . | |
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர்
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று,
குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை
இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.
|
9
|
குன்றிமணி போலச் சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில் புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது காணப் பெற்றார் . அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார் . | |
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்)
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!
|
10
|
அடியவர் பலரும் போற்றிப் புகழுமாறு திருத் துருத்தி , திருப்பழனம் என்ற தலங்களில் உறைபவராய் , விருப்பத்தோடு தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு , உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும் . | |
| Go to top |