வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.
|
1
|
கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால் , மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான் . | |
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
|
2
|
ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது , உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில் , தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின் , நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று , உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான் . | |
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.
|
3
|
பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள் , சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள் . சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான் . | |
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.
|
4
|
உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் . | |
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.
|
5
|
அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க , அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும் , எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய் , பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான் . | |
| Go to top |
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.
|
6
|
ஒற்றியூர்ப்பெருமான் . தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து , மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு , தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன் . | |
பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.
|
7
|
பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க . போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க , கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார் . | |
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
|
8
|
முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே ! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக . | |
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
|
9
|
நெஞ்சமே ! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய் , அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர் . உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள் . அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ் . | |
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.
|
10
|
நெஞ்சே ! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும் . பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக . புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான் . | |
| Go to top |