வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
1
|
மறைமுதல்வனே ! மறைகளைப் பாடுகின்றவனே ! தேவர்கள் தலைவனே ! பார்வதிபாகனே ! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே ! திருஆலவாயிலுள்ள அப்பனே ! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக . | |
நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி!
என் பொனே! ஈசா! என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்-
அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
2
|
எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நான்கு முகங்களை உடையவனே ! தலைவனே ! ஞான வடிவினனே ! என் பொன் போன்றவனே ! எல்லோரையும் ஆள்பவனே ! அன்பனே ! ஆலவாயில் அப்பனே ! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி , பொறிபுலன்களின் வழியே சென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக . | |
ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்;
பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க்
கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
3
|
ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே ! தேவர் களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே ! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே ! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே ! அருள் செய்வாயாக . | |
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே!
மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
4
|
தேவர்தேவனே ! நீலகண்டனே ! மான்மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே ! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே ! ஆலவாயில் உறையும் அப்பனே ! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக . | |
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை;
பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர,
அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
5
|
உலகத் தலைவனே ! ஆலவாய் அப்பனே ! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப்படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன் . அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள்செய்வாயாக . | |
| Go to top |
எஞ்சல் இல் புகல் இது என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு
அஞ்சல்! என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
6
|
விடத்தைக் கழுத்தில் அடக்கிய , சிவம் என்ற சொற் பொருளானவனே ! ஆலவாயில் அப்பனே ! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக . | |
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர்ப்பாதம் காண-தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே! கோலவில்லீ! கூத்தனே! மாத்து ஆய் உள்
அழகனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
7
|
தெள்ளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே ! அழகிய வில்லை ஏந்தியவனே ! கூத்தனே ! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே ! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னைவாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள்செய்வாயாக . | |
நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும்
அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
8
|
கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே ! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே ! ஆலவாயில் அப்பனே ! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக . | |
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
9
|
நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன் வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள்செய்வாயாக . | |
பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்-
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள
அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
|
10
|
திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன் . கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே ! அடியேனுக்கு அருள்செய்வாயாக . | |
| Go to top |
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|