சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கோவலூர் - திருநேரிசை அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA   Add audio link Add Audio

செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!

1
திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே ! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய் , பண்பிலேனாய் , நாய் போன்றேனாய் , குற்றமுடையேனாய் , முடைநாற்றம் உடையேனாய் , அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய் , இருள்தீர மனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன் ? யாது செயற்பாலேன் ?

தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்-
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!

2
குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக் கோவலூர்ப் பெருமானே ! தலையைச் சுமந்து கொண்டு , இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன் .

வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன்,
இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்-
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!

3
இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தெளிந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே ! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய் , நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய் , இப் பிறப்பை இழிவாகக் கருதேனாய் , யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன் .

சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி
காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள
ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி;
கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!

4
கோவலூர்ப்பெருமானே ! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண் , செவி , மூக்கு , வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன் .

தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற
அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!

5
கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே !
Go to top

மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும்
நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து,
காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!

6
கோவலூர்ப் பெருமானே ! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக , ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .

படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!

7
கோவலூர்ப் பெருமானே ! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால் , என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன் , பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும்
ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள்
சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!

8
கோவலூர்ப் பெருமானே ! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன் . உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது ?

நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்;
மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும்
குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!

9
கோவலூர்ப் பெருமானே ! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய் , திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற்படுத்தப் பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன் .

விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.

10
குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான் , விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோவலூர்
4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
Tune - திருநேரிசை   (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000