பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
1
|
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு , மிக்க செல்வத்தை உடைய , இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய , பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டார் . | |
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
2
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத , உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி , மயக்கம் தரும் அவர்கள் , சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை , வயிற்று வலியால் , அழுந்திய நிலையிலிருந்து எடுத்து , என்னை அடியவனாகக் கொண்டு , பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி , அடியேனுக்கு அருள் செய்தவராவர் . | |
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச்
சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
3
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் , மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று , தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று , அவனுக்கு அருள்கள் பல செய்தார் . | |
அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
4
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் , ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றல் உடையவனாய் , பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில் நிலைபெற்ற பகீரதனுக்காக , மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார் . | |
நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
5
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் , மண்ணியாற்றின் நிறைந்த , சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்குப் பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய . அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார் . | |
| Go to top |
விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
6
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும் , உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி , யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச , ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார் . | |
சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி,
மற்று எமை உயக்கொள்! என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச்
செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
7
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் , தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி , தூய மலர்களைத் தூவி , ` எம்மைக் காப்பாற்றுவாயாக ` என்று வேண்ட , வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து , தேவர்களுக்கு அருள் செய்தார் . | |
முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்,
எம் தனி நாதனே! என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய,
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
8
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் , முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , ` எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க , முன்னர் எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார் . | |
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, எம்பெருமான்! என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
|
9
|
சேறைச் செந்நெறிச் செல்வனார் , தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன் , விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும் , தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம் பெருமானே ! என்று வழிபட , தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து , அவனுக்குச் சிறந்த அருள் செய்தார் . | |