சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.073   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்சேறை (உடையார்கோவில்) - திருநேரிசை அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=OvEOqME0sZc   Add audio link Add Audio

பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

1
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு , மிக்க செல்வத்தை உடைய , இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய , பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டார் .

ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

2
சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத , உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி , மயக்கம் தரும் அவர்கள் , சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை , வயிற்று வலியால் , அழுந்திய நிலையிலிருந்து எடுத்து , என்னை அடியவனாகக் கொண்டு , பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி , அடியேனுக்கு அருள் செய்தவராவர் .

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச்
சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

3
சேறைச் செந்நெறிச் செல்வனார் , மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று , தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று , அவனுக்கு அருள்கள் பல செய்தார் .

அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4
சேறைச் செந்நெறிச் செல்வனார் , ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றல் உடையவனாய் , பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில் நிலைபெற்ற பகீரதனுக்காக , மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார் .

நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

5
சேறைச் செந்நெறிச் செல்வனார் , மண்ணியாற்றின் நிறைந்த , சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்குப் பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய . அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார் .
Go to top

விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

6
சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும் , உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி , யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச , ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார் .

சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி,
மற்று எமை உயக்கொள்! என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச்
செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

7
சேறைச் செந்நெறிச் செல்வனார் , தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி , தூய மலர்களைத் தூவி , ` எம்மைக் காப்பாற்றுவாயாக ` என்று வேண்ட , வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து , தேவர்களுக்கு அருள் செய்தார் .

முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்,
எம் தனி நாதனே! என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய,
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

8
சேறைச் செந்நெறிச் செல்வனார் , முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , ` எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க , முன்னர் எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார் .

ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, எம்பெருமான்! என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

9
சேறைச் செந்நெறிச் செல்வனார் , தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன் , விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும் , தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம் பெருமானே ! என்று வழிபட , தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து , அவனுக்குச் சிறந்த அருள் செய்தார் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சேறை (உடையார்கோவில்)
3.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முறி உறு நிறம் மல்கு
Tune - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
4.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந் திரு இமவான் பெற்ற
Tune - திருநேரிசை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
5.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூரியா வரும், புண்ணியம்; பொய்
Tune - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000