சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.094   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) - திருவிருத்தம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார். சிவபெருமானைத் தாயாகப் போற்றும் பதிகமாகும். இது தந்தை, தாய், உடன்பிறந்தோர், உடமை என அனைத்தையும் சிவபெருமானே என்று உணர்த்தும் அற்புதமான பாடலாகும்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8  https://www.youtube.com/watch?v=pTj6oWlvx_U   Add audio link Add Audio

ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

1
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .

பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும்
சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு;
உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.

2
நெஞ்சே ! இவ்வுலகை முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய் உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன என்பதனை அறிந்துவிட்டேன் . ஆதலின் , அவற்றையே நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக . நினைந்திடு எப்போதும் - பாடம் .

விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?

3
காளை வாகனனாகிய பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான் . இனி நம்பக்கம் துயரங்கள் அடையா . தீவினைகள் நெருங்கா . கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்ச மாட்டோம் . பிரமனைப் போன்ற அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ ?

மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

4
மலைமகளாகிய பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித் தங்கியிருக்கும் அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆணவம் அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன .

வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!

5
மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?
Go to top

கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்,
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!

6
திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் . வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக .

எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.

7
முதலில் உன்னைத் தியானிக்காமல் , கடலில் விடம் தோன்றிய பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய் . வலிமை நிறைந்த அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே ! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே ! உன் திருவடிகள் எங்கள் உள்ளத்தில் உள்ளன .

புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!

8
இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற , திருப்பாதிரிப் புலியூரில் உறையும் , செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் .

மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.

9
நெஞ்சே ! இவ்வுலகம் பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே . திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய திருவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம் .

திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!

10
மலையைப் பெயர்க்க முற்பட்ட , நல்லறிவு பொருந்தாத இராவணனுடைய உடலை நெரித்தவனே ! திருப்பாதிரிப் புலியூரில் உறைபவனே ! மனம் திருந்துதல் இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி , இப்பொழுது முத்தியைத் தரும் திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன் . இனி , அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை ஏற்றுக் கொள்வாயாக .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
4.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
Tune - திருவிருத்தம்   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000