சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவீழிமிழலை - திருவிருத்தம் அருள்தரு தோகையம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தோன்றாத்துணையீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=wPzaZrWsx_E   Add audio link Add Audio

வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

1
வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று , அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே ! பெண் மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர் ! பளிங்குமணி போன்ற தெளிந்த நீரை உடைய வீழி மிழலையில் உள்ள செம்மையீர் ! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள் .

அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே
உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

2
ஆதியும் அந்தமுமாக உள்ளவரே ! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே ! காளையை இவர்தலை விரும்பு கின்றவரே ! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே ! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும் .

அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

3
அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே ! மான்கன்று பொருந்திய கையை உடையவரே ! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே ! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே ! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும் .

தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

4
தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே ! பேய்களைத் தன் விருப்பப்படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே ! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே ! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின் .

தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

5
தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும் , தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர் ! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .
Go to top

கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

6
உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே ! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண் கலமாக உடையவரே ! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! உணவு உண்ட போதும் , உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும் , உறங்கும்போதும் , ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று
ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

7
இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே ! தூய வெள்ளிய காளையை வாகனமாகக் கொண்டவரே ! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக் கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரைப் பற்று உடையீர்! படர் தீப் பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்! மிழலை உள்ளீர்!-பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

8
நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே ! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே ! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே ! வீழிமிழலையில் உள்ளவரே ! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

9
இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே ! வேதம் ஓதவல்லவரே ! வெள்ளிய நீற்றை அணிந்தவரே ! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே ! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக் கொண்மின் .

கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள
இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

10
மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே ! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே ! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே ! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -   (திருவீழிமிழலை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000