மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்-
இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி,
சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
1
|
தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு , வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி , மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான் . | |
பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
2
|
ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே . | |
கரப்பு உறு சிந்தையர் காண்டற்கு அரியவன்; காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன்; நீள் புனல் கங்கையும், பொங்கு அரவும்,
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்; காலனைப் பண்டு ஒரு கால்
உரப்பிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
3
|
வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய் , மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய் , கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய் , வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன் . | |
மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை,
கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
4
|
மான்குட்டி விளங்கும் கையினனாய் , தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட , மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன் , கடவூர் உறை உத்தமன் . | |
குழை(த்) திகழ் காதினன்; வானவர்கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆர் உயிர் கொள்ள வந்த,
தழல் பொதி மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உழக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
5
|
குழையணிந்த காதுகளை உடைய , தேவர் தலைவனாகிய தன்னை நீராடி வழக்கமாக அருச்சித்த மாணியின் அரிய உயிரைக் கைப்பற்ற வந்த தீப்பொறி கக்கும் முத்தலைச் சூலம் ஏந்திய கூற்றுவன் கதறுமாறு அவனைச் சிதறச்செய்த சேவடியான் கடவூர் உறை உத்தமன் . | |
| Go to top |
பாலனுக்கு ஆய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி, அரு முனிக்கு ஆய்,-
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூர் உறை உத்தமனே.
|
6
|
சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி , பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான் , கடவூர் உறை உத்தமனாவான் . | |
படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா
உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்;
சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா
உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
7
|
பரவிய சடையிலே கொன்றைமாலை , பாம்பு மாலை , பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய் , உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய் , ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன் . | |
வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல்
பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்;
கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம்
உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே
|
8
|
வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய் , நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய் , கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன் . | |
கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய்,
வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்),
ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே.
|
9
|
பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய் , தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய் , ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய் , எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன் . | |
தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
10
|
தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வ மாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய் , ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான் . | |
| Go to top |