சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.024   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருமழபாடி - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பநாதர் திருவடிகள் போற்றி
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, நன்னிலம், வீழிமிழலை, திருவாஞ்சியம் நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப்புத்தூர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலயநல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவாலம்பொழிலை அடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது, சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ என வினவி மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து, திருமழபாடி சென்று, இறைவனை வணங்கிப் பொன்னார் மேனியனே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=gT_jrRKsfvo   Add audio link Add Audio

பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

1
பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?

கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன்
தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ!
வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே!
கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

2
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள் .

எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்;
இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்;
மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

3
மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்;
வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

4
வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ?

கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய்,
பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே!
மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

5
ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?
Go to top

நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே
ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ!
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே!
ஆளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

6
அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் .

சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல
வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே!
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

7
பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே!
மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

8
வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும்
குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா!
மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே!
அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

9
உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,
வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை,
சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .

10
அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமழபாடி
2.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!
Tune - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காலை ஆர் வண்டு இனம்
Tune - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
Tune - கௌசிகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு ஏறு திருமேனி உடையான்
Tune - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
Tune - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
7.024   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000