பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து, மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
|
1
|
பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ? | |
கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன் தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ! வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே! கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
|
2
|
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள் . | |
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்; இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்; மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
|
3
|
மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ? | |
பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்; வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
|
4
|
வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ? | |
கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய், பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே! மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
|
5
|
ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ? | |
| Go to top |
நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ! மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே! ஆளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
|
6
|
அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் . | |
சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே! மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
|
7
|
பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ? | |
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே! மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
|
8
|
வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ? | |
நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா! மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே! அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
|
9
|
உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ? | |
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை, வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை, சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .
|
10
|
அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் . | |
| Go to top |