இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்! பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்; முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .
|
1
|
எங்கள் பெருமானே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை , ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக , நீ , முத்தையும் மாணிக்கத்தையும் , பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ ! | |
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்; வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும் காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
2
|
வாவிகளில் கயல்மீன்கள் துள்ள , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய் ! | |
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்; ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே! காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும் வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
3
|
தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க , உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே , காடே சிறந்த அரங்காய் இருக்க , செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே , திருக் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும் , பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து , நோயைப் பற்றறுப் பாயன்றோ ! | |
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்; ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை, அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
4
|
ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற , மலர்களையுடைய பொய்கைகளில் , மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற , அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ , என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய் ! | |
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்; சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே! அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
5
|
வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும் , பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே , அரும்பு களையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும் , பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே , நீயன்றோ , எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து , என்னை ஆட்கொண்டாய் ! | |
| Go to top |
பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்! கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்! மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே, விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
6
|
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , பரவெளியின்கண் உள்ள நீ , இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு , பண்ணின்கண் இனிமையைப் போன்றும் , பழத்தின்கண் சுவையைப் போன்றும் , கண்ணின்கண் மணியைப் போன்றும் , மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ ! | |
போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்; சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
7
|
இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ ! ஆதலின் , இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும் , யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன் . | |
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால் தீர்ப்பாய்; சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே, விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
8
|
அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ ! | |
படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே; தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே! கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
9
|
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும் , நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும் , முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் , நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ ! | |
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை, இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்- உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே.
|
10
|
வளப்பம் மிகுந்த சோலைகளையும் , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் . | |
| Go to top |