சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவாரூர் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=N1flgNNpWIM   Add audio link Add Audio

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

1
எனக்குப் பொன்னையும் , மெய்யுணர்வையும் , வழங்குபவனும் , அவை வாயிலாக உலகின்பத்தையும் , வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும் , அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும் , பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும் , இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும் , எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய , அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை;
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை;
பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை;
அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? .

2
மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்ற வனும் , கூற்றுவனை அழித்த காலை உடையவனும் , துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும் , கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும் , வந்த பழிச் சொல்லும் , வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும் , அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய , மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப்
பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை,
ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,
ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

3
மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும் , நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று , காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும் , பகலாகியும் இரவாகியும் இருப்பவனும் , ஒசையைக் கேட்கின்ற செவியாகியும் , சுவையை உணர்கின்ற நாவாகியும் , உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும் , ஒலிக்கின்ற கடலாகியும் , மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்,
வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே!
முத்தன், எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை,
அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

4
நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ் வதற்கு முன்னே , நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ ! நெஞ்சு உளதன்றோ ! அறிவு உளதன்றோ ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ ! அவற்றால் தேவர்கள் , ` இயல்பாகவே பாசம் இல்லாதவன் ` என்றும் , ` எங்கள் தலைவன் ` என்றும் வணங்க நிற் கின்ற , முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும் , யாவர்க்கும் தந்தையும் , என் தந்தைக்குத் தலைவனும் , எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ !

செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்,
மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல்,
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை
அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

5
நன்மையைத்தரும் கல்வியும் , அதன்பயனாகிய உள்ளத்தெளிவும் , அதன்பயனாகிய இறைவன்பற்றும் நமக்கு உள்ளன என்றால் , அவற்றோடே இறப்பும் , மறுபிறப்பும் , வாழ்நாளை இடை முரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால் , இவற்றை யெல்லாம் அறிகின்ற அறிவும் . அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின் , புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற , பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை , பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ !
Go to top

பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று, பொருளும் சுற்றமும் போகமும் ஆகி,
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை,
வள்ளல்! எம்தமக்கே துணை! என்று நாள் நாளும்(ம்) அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே?.

6
எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு , செல்வமும் , படைகளும் , இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற , நன்னெறியாய் உள்ளவனாகிய , தேவர்கள் நாள்தோறும் , ` வள்ளல் ` என்றும் , ` எங்களுக்குத் துணை ` என்றும் சொல்லித் துதிக்கின்ற , சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணை யிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை,
வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு
உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

7
கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும் , இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும் , அழகையுடையவனும் , அடைந் தாரது வருத்தங்களைப் போக்குபவனும் , வேதத்தை உடையவனும் , சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும் , உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் விளக்காய் உள்ளவனும் , தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும் , அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்;
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி;
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

8
யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்றுவிடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும் , சிலர் , அவனை நாள் தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர் . அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர் . ஆயினும் , யான் , எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணை யாவான் என்று கருதி , அவனையே உறவாகக் கொண்டு , அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன் ; அன்றியும் , பலரையும் அவனுக்கு ஆளாகு மாறு முன் நின்று அழைக்கின்றேன் ; ஆதலின் , யான் அவனை மறத்தலும் இயலுமோ !

விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்
இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து
அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே?.

9
எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று , அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும் , கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும் , பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான் , பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும் , உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய , அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த
பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை,
கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே?.

10
என்னை . வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த , நண்பகற் போது போலும் ஒளியுடைய வனும் , நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடைய வனும் , பகலாயும் இரவாயும் உள்ளவனும் , தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும் , கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும் , தேவர்மீது வைத்த அன்பினால் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும் , வேதத்தில் வல்லவனும் ஆகிய , செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை , யான் மறத்தலும் இயலுமோ !
Go to top

ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி,
கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக
ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்-
ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .

11
` பரவை ` என்பவள் முன்னிலையாக , எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய் , தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை , கார் காலத்தில் பூக்கின்ற , மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடைய வனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட . அவன் அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர் , அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்
1.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
1.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
2.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாதித் தன் திரு உருவில்
Tune -   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்   (திருவாரூர் )
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி   (திருவாரூர் )
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
7.047   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )
7.051   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -   (திருவாரூர் )
11.007   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை   திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவாரூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000