அழல் நீர் ஒழுகியனைய சடையும், உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- கழை நீர் முத்தும் ககைக்குவையும் சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
|
1
|
மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும் , மானையும் , யானை , புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் . | |
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்- இண்டை கொண்டு அன்பு இடை அறாத தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.
|
2
|
அன்பு , இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள் , இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , உயிர்கள் செய்த பழைய , வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற , உலகிற்கு முதல்வனும் , தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும் . | |
கோல அரவும், கொக்கின் இறகும், மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்- ஆலும் மயிலும், ஆடல் அளியும், சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.
|
3
|
சோலைகள் , ஆடுகின்ற மயில்களையும் , சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , அழகிய பாம்பையும் , கொக்கின் இறகையும் , மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையை யும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும் . | |
பளிக்குத்தாரை பவளவெற்பில் குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்- அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும் துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.
|
4
|
தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து , மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும் . | |
உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்- திதையும் தாதும் தேனும் ஞிமிறும் துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.
|
5
|
நிலைபெற்ற மகரந்தமும் , தேனும் , வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற , காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , கூற்றுவனுக்கு உதையையும் , ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடைய வனாகிய இறைவனுக்கு இடமாகும் . | |
| Go to top |
ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்- சீதப்புனல் உண்டு எரியைக் காலும் சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.
|
6
|
குளிர்ந்த நீரை உண்டு , தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , மிக்க நீரை யுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட , அருள்மிகுந்த பெரு மான் விரும்பும் ஊராகும் . | |
இறந்தார் என்பும், எருக்கும், சூடிப் புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்- சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.
|
7
|
உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும் , ஏனைய சுற்றத்தாரும் , செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , இறந்தவரது எலும்புகளையும் ` எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு , புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் . | |
காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்- தேமென்குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.
|
8
|
தேன் பொருந்திய , மெல்லிய கூந்தலையுடைய மகளிர் , தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள் , வானத்தில் சென்று நிறைகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த , வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும் . | |
இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்- தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும் தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.
|
9
|
தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு , எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும் , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு , நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவ ராகிய இறைவனது இடமாகும் . | |
சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள் முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடி நாய் ஊரன் சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.
|
10
|
பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன் , சுற்றிலும் , நிறைந்த நீரையுடைய திருச் சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற , இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான் ; இவைகளைக் கற்றவராவார் , யாதொரு துன்பமும் இல்லாதவராவர் . | |
| Go to top |