படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர் விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல் சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
|
1
|
பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச் சூடினார் படுதலை துன்எருக் கதனொடும் நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச் சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
|
2
|
மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும் துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
|
3
|
நலமலி கொள்கையார் நான்மறை பாடலார் வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை மலர்மலி சலமொடு வந்திழி காவிரி சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.
|
4
|
வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர் கந்தமார் மலரொடு காரகில் பல்மணி சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே.
|
5
|
Go to top |
பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
|
6
|
பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
|
7
|
முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள் எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால் அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
|
8
|
துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர் பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர் மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும் தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.
|
9
|
உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள் விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல் வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும் தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.
|
10
|
Go to top |
தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம் கண்ணுத லவனடிக் கழுமல வளநகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல் பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.
|
11
|