பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்; குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன, உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!
|
1
|
இடை அறியேன்; தலை அறியேன்; எம்பெருமான், சரணம்! என்பேன்; நடை உடையன், நம் அடியான்; என்று அவற்றைப் பாராதே, விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்- உடை உடையான், எனை உடையான், உளோம்; போகீர்! என்றானே!
|
2
|
செய் வினை ஒன்று அறியாதேன்; திருவடியே சரண் என்று பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ? பை அரவா! இங்கு இருந்தாயோ? என்ன, பரிந்து என்னை உய்ய அருள் செய்ய வல்லான், உளோம், போகீர்! என்றானே!
|
3
|
கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி; செம்பவளத்திரு உருவன்; சேயிழையோடு உடன் ஆகி, நம்பி இங்கே இருந்தீரே! என்று நான் கேட்டலுமே, உம்பர் தனித்துணை எனக்கு, உளோம்; போகீர்! என்றானே!
|
4
|
பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க, மின் இலங்கு நுண் இடையாள் பாகமா, எருது ஏறி, துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும் உன்ன தம் ஆய்க் கேட்டலுமே, உளோம் போகீர்! என்றானே!
|
5
|
Go to top |
கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர், தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்; கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ? என்ன, ஒண்நுதலி பெருமானார், உளோம்; போகீர்! என்றானே!
|
6
|
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத் தார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; தாங்க(அ)ரிய கார் நிலவு மணிமிடற்றீர்! இங்கு இருந்தீரே? என்ன, ஊர் அரவம் அரைக்கு அசைத்தான், உளோம்; போகீர்; என்றானே!
|
7
|
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி, கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி- யூர் இடம் கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்! என்றானே!
|
8
|
பொன் நவிலும் கொன்றையினாய்! போய் மகிழ்க்கீழ் இரு! என்று சொன்ன எனைக் காணாமே, சூளுறவு மகிழ்க்கீழே என்ன வல்ல பெருமானே! இங்கு இருந்தாயோ? என்ன, ஒன்னலரைக் கண்டால் போல், உளோம்; போகீர்! என்றானே!
|
9
|
மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்து அளித்தாய் என்று உரைக்க, உலகம் எலாம் ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ? என்ன, ஊன்றுவது ஓர் கோல் அருளி, உளோம்; போகீர்! என்றானே!
|
10
|
Go to top |
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட கார் ஆரும் மிடற்றானைக் காதலித்திட்டு, அன்பினொடும் சீர் ஆரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா, வல்வினைதானே.
|
11
|