தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும்
செறி தரு பசு பாச
தேகம் தனை நிலையே ஏய் ஒன்று(ம்)
இரு வினை தீரும் திறல் வினை அறியாதே
ஓயும்படி அறு நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும்
ஓடும் சிறு உயிர் மீளும்படி ந(ல்)ல யோகம் புரிவது கிடையாதோ
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா
மீனம் படு கடல் ஏழும் தழல் பட
வேதம் கதறிய ஒரு நாலும் வாயும் குல கிரி பாலும் தளை பட
மா கந்தரம் அதில் மறை சூரன் மார்பும் துணை உறு தோளும் துணி பட
வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே.
தீ, காற்று, நீர், மண், விண் ஆகிய இந்த ஐந்து பூதங்களும் நிறைந்துள்ள ஜீவாத்மாவும் கட்டுக்கள் ஆகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான இவ்வுடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைக்கத் தெரியாமல், (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும் முடியும்படியான திறமை வாய்ந்த செயல் எதையும் அறிந்து கொள்ளாமல், பிறப்பு ஓயும்படியாக, அறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10 மடங்கு 2,000=20,000) மொத்தம் 600+1,000+20,000=21,600 மூச்சுகள் (ஒவ்வொரு நாளும்) ஓடுகின்ற இந்தச் சிற்றுயிர் விடுதலை அடையும்படி (அதாவது இனி பிறவி ஏற்படாதபடி), நல்ல சிவ யோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ? மூங்கிலும், வேங்கை மரமும், விளா மரமும் இருக்கின்ற வள்ளிமலைச் சார்பான தினைக்கொல்லையில் வாழும் சிறுமியாகிய வள்ளியின் கணவனே, மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும், வேதங்களை வாய் விட்டு உரைக்கும் ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும் மாய மலையான கிரெளஞ்சத்தால் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும், பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரனுடைய மார்பும், இரண்டு தோள்களும் அறுந்து விழவும், வாளாயுதம் கொண்டு சண்டை செய்த பெருமாளே.
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் ... தீ, காற்று, நீர், மண், விண் ஆகிய இந்த ஐந்து பூதங்களும் செறி தரு பசு பாச ... நிறைந்துள்ள ஜீவாத்மாவும் கட்டுக்கள் ஆகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான தேகம் தனை நிலையே ஏய் ஒன்று(ம்) ... இவ்வுடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைக்கத் தெரியாமல், இரு வினை தீரும் திறல் வினை அறியாதே ... (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும் முடியும்படியான திறமை வாய்ந்த செயல் எதையும் அறிந்து கொள்ளாமல், ஓயும்படி அறு நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் ... பிறப்பு ஓயும்படியாக, அறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10 மடங்கு 2,000=20,000) மொத்தம் 600+1,000+20,000=21,600 மூச்சுகள் ஓடும் சிறு உயிர் மீளும்படி ந(ல்)ல யோகம் புரிவது கிடையாதோ ... (ஒவ்வொரு நாளும்) ஓடுகின்ற இந்தச் சிற்றுயிர் விடுதலை அடையும்படி (அதாவது இனி பிறவி ஏற்படாதபடி), நல்ல சிவ யோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ? வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா ... மூங்கிலும், வேங்கை மரமும், விளா மரமும் இருக்கின்ற வள்ளிமலைச் சார்பான தினைக்கொல்லையில் வாழும் சிறுமியாகிய வள்ளியின் கணவனே, மீனம் படு கடல் ஏழும் தழல் பட ... மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும், வேதம் கதறிய ஒரு நாலும் வாயும் குல கிரி பாலும் தளை பட ... வேதங்களை வாய் விட்டு உரைக்கும் ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும் மாய மலையான கிரெளஞ்சத்தால் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும், மா கந்தரம் அதில் மறை சூரன் மார்பும் துணை உறு தோளும் துணி பட ... பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரனுடைய மார்பும், இரண்டு தோள்களும் அறுந்து விழவும், வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே. ... வாளாயுதம் கொண்டு சண்டை செய்த பெருமாளே.