இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து
இளகிப் புளகித்திடு(ம்) மாதர்
இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு உற்று
இறுகக் குறுகிக் குழல் சோரத்
தரு மெய்ச் சுவை உற்று இதழைப் பருகித்
தழுவிக் கடி சுற்று அணை மீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவம் அற்று உழலக் கடவேனோ
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு
உரியத் திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிர் உற்ற
அசுரக் கிளையைப் பொருவோனே
பரிவு உற்று அரனுக்கு அருள் நல் பொருளைப்
பயன் உற்று அறியப் பகர்வோனே
பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே.
இரண்டு செப்புக் குடங்கள் போலவும், மலை போலவும், வட்ட வடிவுடன் விளங்கி இளகிப் பூரிக்கும் பெண்களுடைய இடைக்கு அழகிய சுமையாக உள்ள மார்பகங்களைப் பெறும் பொருட்டு அவர்களுடன் நட்பு கொண்டு, நெருங்கி அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ, (அவர்கள்) தருகின்ற உடல் இன்பத்தை அடைந்து, வாயிதழ் ஊறலை உண்டு, (அவர்களைத்) தழுவி, வாசனை உலவுகின்ற படுக்கையின் மேலே, காம லீலைகளை இடைவிடாமல் செய்து, கொஞ்சிப் பேசி, உள்ளம் களித்து, தவ நிலையை விட்டு திரியக் கடவேனோ? திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய தலைவனே, வெற்றி உள்ள சேவல் ஆகிய நல்ல கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர்களுடைய கூட்டத்தைத் தாக்கியவனே, அன்பு பூண்டு சிவனுக்கு, அருள் பாலிக்கும் நல்ல பிரணவப் பொருளை அதன் பயனை உணர்த்தும் வகையில் உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகிப் புளகித்திடு(ம்) மாதர் இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு உற்று ... இரண்டு செப்புக் குடங்கள் போலவும், மலை போலவும், வட்ட வடிவுடன் விளங்கி இளகிப் பூரிக்கும் பெண்களுடைய இடைக்கு அழகிய சுமையாக உள்ள மார்பகங்களைப் பெறும் பொருட்டு அவர்களுடன் நட்பு கொண்டு, இறுகக் குறுகிக் குழல் சோரத் தரு மெய்ச் சுவை உற்று இதழைப் பருகித் தழுவிக் கடி சுற்று அணை மீதே ... நெருங்கி அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ, (அவர்கள்) தருகின்ற உடல் இன்பத்தை அடைந்து, வாயிதழ் ஊறலை உண்டு, (அவர்களைத்) தழுவி, வாசனை உலவுகின்ற படுக்கையின் மேலே, சருவிச் சருவிக் குனகித் தனகித் தவம் அற்று உழலக் கடவேனோ ... காம லீலைகளை இடைவிடாமல் செய்து, கொஞ்சிப் பேசி, உள்ளம் களித்து, தவ நிலையை விட்டு திரியக் கடவேனோ? அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரியத் திரு மைத்துன வேளே ... திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய தலைவனே, அடல் குக்குட நல் கொடி பெற்று எதிர் உற்ற அசுரக் கிளையைப் பொருவோனே ... வெற்றி உள்ள சேவல் ஆகிய நல்ல கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர்களுடைய கூட்டத்தைத் தாக்கியவனே, பரிவு உற்று அரனுக்கு அருள் நல் பொருளைப் பயன் உற்று அறியப் பகர்வோனே ... அன்பு பூண்டு சிவனுக்கு, அருள் பாலிக்கும் நல்ல பிரணவப் பொருளை அதன் பயனை உணர்த்தும் வகையில் உபதேசித்தவனே, பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப் பழநிக் குமரப் பெருமாளே. ... வாயு மண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.