வேலை வாளைக் கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும்
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும்
வெகு ரூப கோலகாலத்தை விடல் ஆகி மாறக் குண விகாரம் ஓட
தெளிய அரிதான கூற ஒ(ண்)ணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாகப் பெருமை தருவாயே
வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக் கருது(ம்) மநு ராமன்
வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா
உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே
நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே.
வேலாயுதத்தையும், வாளையும், கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று கொண்டு நிலை கெடுகின்ற பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும், தெளிந்து அறிவதற்கு அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும், மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான பெருமையைத் தந்து அருள்வாய். வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால், விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய திருமாலுக்கு மருகனே, மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே, அன்பு கூடும்படி, மயில் போன்ற குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.
வேலை வாளைக் கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும் ... வேலாயுதத்தையும், வாளையும், கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் ... துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று கொண்டு நிலை கெடுகின்ற வெகு ரூப கோலகாலத்தை விடல் ஆகி மாறக் குண விகாரம் ஓட ... பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும், தெளிய அரிதான கூற ஒ(ண்)ணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாகப் பெருமை தருவாயே ... தெளிந்து அறிவதற்கு அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும், மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான பெருமையைத் தந்து அருள்வாய். வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக் கருது(ம்) மநு ராமன் ... வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால், வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா ... விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய திருமாலுக்கு மருகனே, உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே ... மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே, நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே. ... அன்பு கூடும்படி, மயில் போன்ற குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.