ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து
பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழ் ஊறல் ஆதரவின் உண்டு
வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட
அபிராம மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடமில் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே
உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே
ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று
வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர அலங்க்ருத ஆகர
ராசதம் அறிந்த கோமள வடிவோனே
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமி மலை நின்று உலாவிய பெருமாளே.
(விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள் சேரக் கலந்து, பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன் என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி, வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார் என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும் மோத, அழகிய மான் அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய, உனது தாமரை போன்ற அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம் செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ? இழிவான மிக்க ஐந்து மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு, தேவர்களுடைய சிறந்த சேனையை ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே, ராசத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே, விடாமழை பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே, வயலூரில் வாழ்பவனே, நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே.
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து ... (விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள் சேரக் கலந்து, பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழ் ஊறல் ஆதரவின் உண்டு ... பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன் என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி, வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட ... வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார் என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும் மோத, அபிராம மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடமில் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே ... அழகிய மான் அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய, உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே ... உனது தாமரை போன்ற அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம் செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ? ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று ... இழிவான மிக்க ஐந்து மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு, வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர அலங்க்ருத ஆகர ... தேவர்களுடைய சிறந்த சேனையை ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே, ராசதம் அறிந்த கோமள வடிவோனே ... ராசத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே, சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே ... விடாமழை பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே, வயலூரில் வாழ்பவனே, சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமி மலை நின்று உலாவிய பெருமாளே. ... நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே.