கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய மருளாலே
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய்
இதம் இதம் என்று நாளு(ம்) மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே
இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல் இரவு பகல் சென்று வாடி உழல்வேனோ
மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே
வகை வகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட
மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே.
சூரியன் உதித்துச் செல்லும் எல்லை அளவைச் சென்று கண்டும், மோதும் அலைகளை உடைய கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், உலக மாயை என்னும் மயக்கத்தால், கூட்டமான படங்களை உடைய பாம்பு அரசனாகிய ஆதிசேஷனின் எல்லை அளவைப் போய்க் கண்டும், கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய நடந்து தேயுமாறு அங்கங்கே சென்று, இது நல்ல இடம் என்று எண்ணி லோபிகளுடைய சமீபத்தில் அணுகிச் சேர்ந்து, இதுதான் சரியான இடம் என்று எண்ணி மனத் தளர்ச்சி கொள்ளாமல், இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் புகழ்ந்து நின்ற போது, அந்த இடத்தை விட்டு வெளியே நழுவும் பெரிய பிரமுகர்களின் வீட்டு வாசலில் இரவும் பகலும் சென்று நான் வாடித் திரியலாமோ? வண்டுகள் நிறைந்து வாசனை வீசும் தேனை உண்டு, கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே இனம் இனமாக எழுந்து சாமம் என்னும் சிறந்த வேதத்தை வியக்கத்தக்க முறையில் பாட, சந்திரனின் தண்மையைத் தரும் சுவாமிமலையாகிய திருவேரகத்தில் வாழும் செல்வமே, உலகம் எல்லாம் திர்ச்சி கொள்ள வீசுகின்ற பெருங்காற்று என்று சொல்லும்படியாக வருகின்ற, நீல நிறங்கொண்ட தோகையை உடைய, அழகான மயிலில் விரும்பி ஏறும் இளையவனே, முறையாக எல்லா உலகங்களையும் படைத்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்த பார்வதி தேவி அருளிய மகனே, தேவர்களின் பெருமாளே.
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய மருளாலே ... சூரியன் உதித்துச் செல்லும் எல்லை அளவைச் சென்று கண்டும், மோதும் அலைகளை உடைய கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், உலக மாயை என்னும் மயக்கத்தால், கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் ... கூட்டமான படங்களை உடைய பாம்பு அரசனாகிய ஆதிசேஷனின் எல்லை அளவைப் போய்க் கண்டும், கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய நடந்து தேயுமாறு அங்கங்கே சென்று, இதம் இதம் என்று நாளு(ம்) மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே ... இது நல்ல இடம் என்று எண்ணி லோபிகளுடைய சமீபத்தில் அணுகிச் சேர்ந்து, இதுதான் சரியான இடம் என்று எண்ணி மனத் தளர்ச்சி கொள்ளாமல், இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல் இரவு பகல் சென்று வாடி உழல்வேனோ ... இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் புகழ்ந்து நின்ற போது, அந்த இடத்தை விட்டு வெளியே நழுவும் பெரிய பிரமுகர்களின் வீட்டு வாசலில் இரவும் பகலும் சென்று நான் வாடித் திரியலாமோ? மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே ... வண்டுகள் நிறைந்து வாசனை வீசும் தேனை உண்டு, கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே வகை வகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட ... இனம் இனமாக எழுந்து சாமம் என்னும் சிறந்த வேதத்தை வியக்கத்தக்க முறையில் பாட, மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே ... சந்திரனின் தண்மையைத் தரும் சுவாமிமலையாகிய திருவேரகத்தில் வாழும் செல்வமே, அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே ... உலகம் எல்லாம் திர்ச்சி கொள்ள வீசுகின்ற பெருங்காற்று என்று சொல்லும்படியாக வருகின்ற, நீல நிறங்கொண்ட தோகையை உடைய, அழகான மயிலில் விரும்பி ஏறும் இளையவனே, அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே. ... முறையாக எல்லா உலகங்களையும் படைத்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்த பார்வதி தேவி அருளிய மகனே, தேவர்களின் பெருமாளே.