கிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை
கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வைக் கெடு மடக் குருடரைத் திருடரை
சமய தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று அறிவு ஏதும் அறிதல் அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று
அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே அமிழ்தல் அற்று
எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு அணுகிடப் பெறுவேனோ
பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட
சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப் புலவோனே
தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப் புதல்வ
நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு
செருத்தணியினில் சரவணப் பெருமாளே.
பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின் வழியே செல்லுபவர்களை, கெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத குருடர்களை, திருடர்களை, சமயவாதிகளை (நான்) நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி உற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல், குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி, முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும் நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை அணுகப் பெறுவேனோ? அறிவுள்ள (கூன்) பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும், சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும், புகலியில் (சீகாழியில்) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய திருஞான சம்பந்தரே, அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி, திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே, சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும் பூவைத் தருகின்ற திருத்தணிகையில் (வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே.