கனக தம்பத்தைச் செச்சையை மெச்சும் கடக சங்கத்துப் பொன் புய வெற்பன்
கடலுள் வஞ்சித்துப் புக்கது ஒர் கொக்கும் பொடியாகக் கறுவு செம் சத்திப் பத்ம கரத்தன்
குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் கவி மொழிந்து அத்தைக் கற்று அற உற்றும்
புவியோர் போய் குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும் குமணன் என்று ஒப்பிட்டு
இத்தனை பட்டு இங்கு இரவு ஆன குருடு கொண்டு அத்தச் சத்தம் அனைத்தும் திருடியும் சொற்குத் தக்க தொடுத்தும்
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ
சனகன் அன்புற்றுப் பெற்ற மடப் பெண் தனிப் பெரும் கற்புச் சக்ரம் நடத்தும் தகை இலங்கைச் சுற்றத்தை முழுத்தும் சுடவே
வெம் சமர சண்டக் கொற்றத்து அவ் அரக்கன் கதிர் விடும் பத்துக் கொத்து முடிக்கும் தனி ஒர் அம்பைத் தொட்டுச் சுரர் விக்னம் களைவோனும்
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்குக் கத்தர் அகத்(தி)யன் திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம்
செகதலம் சுத்தப் பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்றுப் பெற்றவர் மற்றும் சிவனும் வந்திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவாள் முதலிய கூட்டங்களை அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன், கடலிலே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த சிவந்த சக்தி வேலை ஏந்திய தாமரைக் கரங்களை உடையவன், குமரன் என்று பூஜித்து, அத்தகைய பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும், உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண வள்ளலே என்றும் உவமைகள் கூறி, இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய நூல்களிலிருந்து) திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும், (தங்கள் பெருமைக்கு) மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ? ஜனக மன்னன் அன்புடன் பெற்ற அழகிய (சீதையாகிய) பெண்ணுடைய ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் சக்கரம் (ஆக்ஞை) நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் (அரக்கர் குலச்) சுற்றத்தார் யாவரும் சுடப்பட்டு அழியும்படி, கொடிய போர் வல்ல, கோபம் கொண்ட, வீரம் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசும் பத்துக் கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின் இடர்களை நீக்கிய திருமாலும், சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய ஈசான்யனும், (எட்டுத்) திக்கு பாலகர்களும், அகத்திய முனிவரும், பிரமனும், புகழ் பெற்ற வசிஷ்டரும், கூட்டமான வேதங்களும், லோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற ஞானிகளும், பின்னும் சிவ பெருமானும் வணங்கி நிற்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
கனக தம்பத்தைச் செச்சையை மெச்சும் கடக சங்கத்துப் பொன் புய வெற்பன் ... பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவாள் முதலிய கூட்டங்களை அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன், கடலுள் வஞ்சித்துப் புக்கது ஒர் கொக்கும் பொடியாகக் கறுவு செம் சத்திப் பத்ம கரத்தன் ... கடலிலே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த சிவந்த சக்தி வேலை ஏந்திய தாமரைக் கரங்களை உடையவன், குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் கவி மொழிந்து அத்தைக் கற்று அற உற்றும் ... குமரன் என்று பூஜித்து, அத்தகைய பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும், புவியோர் போய் குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும் குமணன் என்று ஒப்பிட்டு ... உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண வள்ளலே என்றும் உவமைகள் கூறி, இத்தனை பட்டு இங்கு இரவு ஆன குருடு கொண்டு அத்தச் சத்தம் அனைத்தும் திருடியும் சொற்குத் தக்க தொடுத்தும் ... இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய நூல்களிலிருந்து) திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும், குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ ... (தங்கள் பெருமைக்கு) மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ? சனகன் அன்புற்றுப் பெற்ற மடப் பெண் தனிப் பெரும் கற்புச் சக்ரம் நடத்தும் தகை இலங்கைச் சுற்றத்தை முழுத்தும் சுடவே ... ஜனக மன்னன் அன்புடன் பெற்ற அழகிய (சீதையாகிய) பெண்ணுடைய ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் சக்கரம் (ஆக்ஞை) நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் (அரக்கர் குலச்) சுற்றத்தார் யாவரும் சுடப்பட்டு அழியும்படி, வெம் சமர சண்டக் கொற்றத்து அவ் அரக்கன் கதிர் விடும் பத்துக் கொத்து முடிக்கும் தனி ஒர் அம்பைத் தொட்டுச் சுரர் விக்னம் களைவோனும் ... கொடிய போர் வல்ல, கோபம் கொண்ட, வீரம் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசும் பத்துக் கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின் இடர்களை நீக்கிய திருமாலும், தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்குக் கத்தர் அகத்(தி)யன் திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம் ... சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய ஈசான்யனும், (எட்டுத்) திக்கு பாலகர்களும், அகத்திய முனிவரும், பிரமனும், புகழ் பெற்ற வசிஷ்டரும், கூட்டமான வேதங்களும், செகதலம் சுத்தப் பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்றுப் பெற்றவர் மற்றும் சிவனும் வந்திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே. ... லோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற ஞானிகளும், பின்னும் சிவ பெருமானும் வணங்கி நிற்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.