சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல
தண் கயல் வாளி க(ண்)ணார் இளம் பிறை விண் புருவர்
இதழ் கோவையின் கனி தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் கந்தரர்
தேமலு(ம்) மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின் பெறு கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை
கண் களி கூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே
இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது இன்புறவே மனு நூல் விளம்பிய கந்த வேளே
சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகா மணி மோக வஞ்சியர் செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக
ஒண் குக அன்பர் ஓதுசெந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர திண் சபை மேவும் ம(ன்)னா சவுந்தர தம்பிரானே.
சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலை விளங்க, மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய, நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க, குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள். விண்ணில் விளங்கும் இளம் பிறைச் சந்திரன் போன்ற புருவத்தை உடையவர்கள். கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள். பொது மகளிர்களுக்கே உரித்தான காம லீலைகளைச் செய்பவர்கள். சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள். தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த, அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, தேவலோகத்து ரம்பை போன்ற விலைமாதர்கள் மீது, கண்கள் மகிழ மிக்க ஆசை பூண்டு, அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன். இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில் இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே, லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே, தரும சாஸ்திரத்தை எடுத்து ஓதிய கந்த வேளே. செங் குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகனே, செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம் விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல ... சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலை விளங்க, மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய, நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க, தண் கயல் வாளி க(ண்)ணார் இளம் பிறை விண் புருவர் ... குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள். விண்ணில் விளங்கும் இளம் பிறைச் சந்திரன் போன்ற புருவத்தை உடையவர்கள். இதழ் கோவையின் கனி தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் கந்தரர் ... கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள். பொது மகளிர்களுக்கே உரித்தான காம லீலைகளைச் செய்பவர்கள். சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள். தேமலு(ம்) மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின் பெறு கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை ... தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த, அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, தேவலோகத்து ரம்பை போன்ற விலைமாதர்கள் மீது, கண் களி கூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே ... கண்கள் மகிழ மிக்க ஆசை பூண்டு, அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன். இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா ... இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில் இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே, இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது இன்புறவே மனு நூல் விளம்பிய கந்த வேளே ... லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே, தரும சாஸ்திரத்தை எடுத்து ஓதிய கந்த வேளே. சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகா மணி மோக வஞ்சியர் செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக ... செங் குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகனே, ஒண் குக அன்பர் ஓதுசெந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர திண் சபை மேவும் ம(ன்)னா சவுந்தர தம்பிரானே. ... செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம் விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.