குழைக்கும் சந்தனச் செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் குலுக்கும் பைங்கொடிக்கு என்று
இங்கு இயலாலே குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று
உரைக்கும் செம் கயல் கண் கொண்டு அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே
உழைக்கும் சங்கடத் துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டு உண்டு
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே
உதிக்கும் செம் கதிர்ச் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டு
உயர்க்கும் கிண்கிணிச் செம் பஞ்சு அடி சேராய்
தழைக்கும் கொன்றையைச் செம்பொன் சடைக்கு அண்ட அங்கியைத் தங்கும் தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்
தனிப் பங்கின் புறத்தின் செம் பரத்தின் பங்கயத்தின் சஞ்சரிக்கும் சங்கரிக்கு என்றும் பெரு வாழ்வே
கழைக்கும் குஞ்சரக் கொம்பும் கலைக் கொம்பும் கதித்து என்றும் கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே.
குழைத்துக் கலவையான சந்தனம், சிகப்பு நிறமான குங்குமம் (இவைகள் பூசப்பட்ட) அழகிய உயர்ந்த மலை போன்ற மார்பகங்களைக் குலுக்கும் பசுங்கொடி போல் நின்று தோன்ற, இங்கு இயல்பாகவே குண்டலம் தரித்த காதினிடத்தும், நிறமுள்ள குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் கண்கள் சென்று பேசுவது போல செவ்விய கயல் மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற, இசைக் குரல் தழைத்துள்ள, நஞ்சு போன்ற விலைமாதர்களுக்கு உழைப்பதால் வரும் சங்கடங்களையும் துன்பங்களையும் கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்து மிகுதியாக உண்டு, உடலாகிய பிண்டம் கனமானதாகி இந்த உலகில் அலையாமல், உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதான சிவந்த தண்டையிலும், மேலான கிண்கிணியிலும், சிவந்த பஞ்சு போல் மிருதுவான அடியிலும் என்னைச் சேர்த்து அருளுக. தழைத்துள்ள கொன்றை மலரை செம்பொன் போன்ற சடையில் சேர்த்தும், நெருப்பைத் தங்கும் படியாக அழகிய செவ்விய கையில் சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய ஒப்பற்ற இடது பாகத்தின் புறத்திலும், சிறந்த பர மண்டலத்திலும், தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் பார்வதிக்கு எப்போதும் சிறந்த பிள்ளையே, அங்குசம் அடக்கும் வெள்ளை யானை வளர்த்த கொடிபோன்ற தேவயானையும், மான் வயிற்றில் பிறந்த வள்ளியும் மகிழ்வுற, எப்போதும் (அவர்களுடைய) கயல் மீன் போன்ற கண்களுக்கு இன்பம் தரும் திண்ணிய தோள்களை உடையவனே, கரிய மேகம் போலப் பொங்கி எழும் கடல் சங்குகளைக் கொண்டு கரையில் கொழிக்கின்ற திருச்செந்தூரை இருப்பிடமாகக் கொண்டு, அன்புடன் அத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
குழைக்கும் சந்தனச் செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் குலுக்கும் பைங்கொடிக்கு என்று ... குழைத்துக் கலவையான சந்தனம், சிகப்பு நிறமான குங்குமம் (இவைகள் பூசப்பட்ட) அழகிய உயர்ந்த மலை போன்ற மார்பகங்களைக் குலுக்கும் பசுங்கொடி போல் நின்று தோன்ற, இங்கு இயலாலே குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று ... இங்கு இயல்பாகவே குண்டலம் தரித்த காதினிடத்தும், நிறமுள்ள குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் கண்கள் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே ... பேசுவது போல செவ்விய கயல் மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற, இசைக் குரல் தழைத்துள்ள, நஞ்சு போன்ற விலைமாதர்களுக்கு உழைக்கும் சங்கடத் துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டு உண்டு ... உழைப்பதால் வரும் சங்கடங்களையும் துன்பங்களையும் கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்து மிகுதியாக உண்டு, உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே ... உடலாகிய பிண்டம் கனமானதாகி இந்த உலகில் அலையாமல், உதிக்கும் செம் கதிர்ச் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டு ... உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதான சிவந்த தண்டையிலும், உயர்க்கும் கிண்கிணிச் செம் பஞ்சு அடி சேராய் ... மேலான கிண்கிணியிலும், சிவந்த பஞ்சு போல் மிருதுவான அடியிலும் என்னைச் சேர்த்து அருளுக. தழைக்கும் கொன்றையைச் செம்பொன் சடைக்கு அண்ட அங்கியைத் தங்கும் தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார் ... தழைத்துள்ள கொன்றை மலரை செம்பொன் போன்ற சடையில் சேர்த்தும், நெருப்பைத் தங்கும் படியாக அழகிய செவ்விய கையில் சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய தனிப் பங்கின் புறத்தின் செம் பரத்தின் பங்கயத்தின் சஞ்சரிக்கும் சங்கரிக்கு என்றும் பெரு வாழ்வே ... ஒப்பற்ற இடது பாகத்தின் புறத்திலும், சிறந்த பர மண்டலத்திலும், தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் பார்வதிக்கு எப்போதும் சிறந்த பிள்ளையே, கழைக்கும் குஞ்சரக் கொம்பும் கலைக் கொம்பும் கதித்து என்றும் கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே ... அங்குசம் அடக்கும் வெள்ளை யானை வளர்த்த கொடிபோன்ற தேவயானையும், மான் வயிற்றில் பிறந்த வள்ளியும் மகிழ்வுற, எப்போதும் (அவர்களுடைய) கயல் மீன் போன்ற கண்களுக்கு இன்பம் தரும் திண்ணிய தோள்களை உடையவனே, கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே. ... கரிய மேகம் போலப் பொங்கி எழும் கடல் சங்குகளைக் கொண்டு கரையில் கொழிக்கின்ற திருச்செந்தூரை இருப்பிடமாகக் கொண்டு, அன்புடன் அத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.