கரிய கூந்தலை உடையவர்கள், முத்துப்போன்ற பல் வரிசை உள்ள வாயில் சர்க்கரையைப் போன்று இனிய பேச்சை உடையவர்கள், பூரண சந்திரன் போன்ற திலகத்தை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள், கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள், நல்ல திறமை உள்ள சித்திரம் எழுதுவோன் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள், தோள்கள் கரும்பு ஆலையில் உள்ள கரும்பு போல் மென்மையாக உடையவர்கள், தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள் .. இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேனாகிய நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ? ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அளித்தருளுக. பூ மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள், அற்புதமான வேதச் சொரூபத்தை உடையவள், தனது அக்கினி உருவத்தில் ஒளி பொருந்திய மலை போன்ற பார மார்பகங்களைக் கொண்டவள், குயில் போன்றவள், சிவபெருமானிடத்தில் காதல் நிறைந்த நல்ல செயலினாளுமான உத்தமி, மாணிக்கம் போன்ற மின்னொளி வீசுபவள், மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர், சூலத்தைக் கையில் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற ஜோதிப் பொருளான பிரணவத்தை அவர் செவியில் ஏற்றிய முருகனே, பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து, ஜோதிமயமான புலியூராகிய சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமாளே.
நீலக் குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் ... கரிய கூந்தலை உடையவர்கள், முத்துப்போன்ற பல் வரிசை உள்ள வாயில் சர்க்கரையைப் போன்று இனிய பேச்சை உடையவர்கள், தைப்பிறை நீளச் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் ... பூரண சந்திரன் போன்ற திலகத்தை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள், நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் ... கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள், நற் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் ... நல்ல திறமை உள்ள சித்திரம் எழுதுவோன் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள், தோள் ஆலைக் கழையார் துத்தி கொள் ஆரக் குவடார் ... தோள்கள் கரும்பு ஆலையில் உள்ள கரும்பு போல் மென்மையாக உடையவர்கள், தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள் .. கட்டளையாகத் தமியேன் நித்தமும் உழல்வேனோ ... இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேனாகிய நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ? ஆசைப்பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாகக் கொளவே முத்தியை அருள்வாயே ... ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அளித்தருளுக. மாலைக் குழலாள் அற்புத வேதச் சொருபாள் ... பூ மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள், அற்புதமான வேதச் சொரூபத்தை உடையவள், அக்கினி மார்பில் பிரகாசக் கிரி தனபார வாசக் குயிலாள் ... தனது அக்கினி உருவத்தில் ஒளி பொருந்திய மலை போன்ற பார மார்பகங்களைக் கொண்டவள், குயில் போன்றவள், நல் சிவகாமச் செயலாள் பத்தினி மாணிக்க மி(ன்)னாள் நிஷ்கள உமை பாகர் ... சிவபெருமானிடத்தில் காதல் நிறைந்த நல்ல செயலினாளுமான உத்தமி, மாணிக்கம் போன்ற மின்னொளி வீசுபவள், மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர், சூலக் கையினார் அக்கினி மேனிப் பரனாருக்கு ... சூலத்தைக் கையில் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ஆகிய சிவபெருமானுக்கு ஒரு சோதிப் பொருள் கேள்விக்கு இடு முருகோனே ... ஒப்பற்ற ஜோதிப் பொருளான பிரணவத்தை அவர் செவியில் ஏற்றிய முருகனே, சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர் ... பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து, சோதிப் புலியூர் நத்திய பெருமாளே. ... ஜோதிமயமான புலியூராகிய சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமாளே.