நாணல் காட்டிலே பிறந்தவனே (சரவணபவனே), வலிமையோடு குதித்து சாமர்த்தியமாய் எதிர்த்துவந்த சூரனை ஒழுங்காக நடந்துகொண்ட வரைக்கும் விட்டுவைத்தாய், சரியில்லாத போது அடுத்து வந்து அவனை நெருக்கினாய், உடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்தாய், தலையையும் மார்பையும் அறுத்துக் குவித்தாய், கொன்றெறிந்தாய், பல மாலைகளை விருதுகளாகவும், சிறகுடைய சேவல் ஒன்றையும் பரிசாகப் பெற்றாய், வெற்றியை அடைந்தாய், உனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்தருள்க. திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும் அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார், பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார், பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே. பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்தார், அதனை விரித்து ஆடையாக அணிந்து கொண்டார். (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்த மன்மதனை சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின் கண்மணியான முத்தையனே, கதிர்காமம் என்ற தலத்தில் சென்று விளங்கிய முருகனே.