நிகரில் பஞ்ச பூதமு
நினையு நெஞ்சும் ஆவியு
நெகிழ வந்து நேர்படும் அவிரோதம்
நிகழ் தரும் ப்ரபாகர
நிரவயம் பராபர
நிருப அங்குமாரவெளென வேதம்
சகர சங்க சாகரம் என
முழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதகர் அறியாத
தனிமை கண்டதான
கிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்டரீகம் அது அருள்வாயே
மகர விம்ப சீகர
முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட
நெடுவான வழிதிறந்து சேனையும்
எதிர்மலைந்த சூரனு மடிய
இந்தி ராதியர் குடியேற
சிகர துங்க மால்வரை தகர
வென்றி வேல்விடு சிறுவ
சந்த்ர சேகரர் பெருவாழ்வே
திசைதொறும் ப்ர பூபதி
திசைமுகன்பராவிய
திருவிரிஞ்சை மேவிய பெருமாளே.
ஒப்பில்லாத ஐந்து பூதங்களும், நினைக்கும் நெஞ்சும், உயிரும், நெகிழும்படி கூடுகின்ற விரோதமின்மையை ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே, அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும், சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான சமுத்திரம் போல பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம் சமயவாதிகளான பஞ்சமா பாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும், கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ளதுமான திருவடித் தாமரையதனைத் தந்தருள்வாயாக. மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடல் கலக்கமுற்று, சூடாகி, கொந்தளிக்கவும், பெரிய ஆகாய மார்க்கமாக வந்த சேனைகளும், எதிர்த்துப் போர் செய்த சூரனும் மாண்டு போக, இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற, சிகரங்களை உடைய உயர்ந்த மந்திரஜால கிரெளஞ்சமலை தகர்ந்துபோக வெற்றி வேலினை விடுத்த சிறுவனே, சந்திரனை முடியில் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே, திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த அரசர்களும், நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.