அமரும் அமரரினில் அதிகன்
அயனும் அரியவரும் வெருவ வரும்
அதிகாளம் அதனை
அதகரண விதன
பரிபுரணமமை அ(ன்)னவர்கரண
அகிலேச
நிமிர வருள்சரண
நிபிடம் அது என
உன நிமிர
சமிரமய
நியமாய
நிமிடமதனில் உணவல
சிவசுதவர
நினது பதவிதர வருவாயே
சமரச அமர சுர
விதரபர அசுர
சரத விரதஅயில் விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடனவித
மயிலின் முதுகில்வரும்
இமைய மகள்குமர எமதீச
இயலி னியல்
மயிலை நகரில் இனிதுறையும்
எமது பரகுரவ பெருமாளே.
சிறந்த தேவர்களில் மேம்பட்டவனான இந்திரன், பிரம்மா, திருமால் ஆகியோர் அஞ்சும்படி வந்த ஆலகால விஷத்தினை (அடக்குவதற்காக) மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே, சிந்தை நிறைந்த சாந்தர் மனத்தில் இருப்பவனே, அகில உலகிற்கும் ஈசனே, எம் தாழ்வு நீங்கி யாம் நிமிர்ந்திட உன் திருவடி அருளவேண்டும், (அவ்விஷம்) எம்மை நெருங்கி வருகிறது, என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட, நினைக்கின்ற மாத்திரத்திலேயே, வாயு வேகத்தில், (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்) கடமையென்று நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை) உண்டருளிய சிவனுடைய சிரேஷ்டமான குமாரனே, உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட வரவேண்டும். ஒற்றுமையான பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு பகைவர்களாகிய அசுரர்கள் மேல் சத்தியமான ஆக்ஞாசக்தி வேலை விடுவோனே, (என்னும் அதே ஒலியில்) (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற நடனவகைகள் செய்யும் மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே, இமயராஜன் மகள் பார்வதி பெற்ற குமரா, எம் இறைவனே, தகுதி வாய்ந்துள்ள திருமயிலை நகரிலே இன்பமாக வாழும் எங்கள் மேலான குருதேவப் பெருமாளே.