மகரக் குழைக்குள் உந்து நயனக் கடைக்கு இலங்கு வசி அச் சரத்து இயைந்த குறியாலே
வட வெற்பு அதைத் துரந்து களபக் குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே
மெய் உகப் பதைத்து நெஞ்சும் விரகக் கடல் பொதிந்த உலை பட்டு அலர்ச் சரங்கள் நலியாமல்
உலகப் புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமைப் புகழ் பகர்ந்து திரிவேனோ
புகர் கைக் கரிப் பொதிந்த முளரிக் குளத்தி(ல்) இழிந்த பொழுதில் கரத் தொடர்ந்து பிடி நாளில்
பொருமித் திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுதக் கணத்து வந்து கையில் ஆரும் திகிரிப் படைத்துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்று(ம்) திலதைப் பதிக்கு கந்த பெருமாளே.
மீன் போல் அமைந்த குண்டலங்கள் மீது தாவிப் பாயும் கடைக்கண்களில் விளங்கும் கூர்மை வாய்ந்த அந்த அம்பால் ஏற்பட்ட வடுவாலும், மேரு மலையை வடக்கே (வெட்கப்பட்டு) ஓட வைத்து, சந்தனக் கலவை அணிந்த குடத்தை வெற்றி கொண்டு, செழிப்புடன் பெருத்து எழுந்த மார்பின் மேலும், உடல் நடுங்கிப் பதைப்புற என் மனம் காம மோகக் கடலில் ஏற்பட்ட (விரகாக்கினி) உலையில் அவதிப்பட்டு, (மன்மதனின்) மலர்ப் பாணங்கள் என்னை வேதனைப் படுத்தாமல், உலகத்தோரின் புகழ்க் கூச்சல் என்னும் செருக்கு நீங்க, ஞான உணர்ச்சி கொண்டு உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரிய மாட்டேனோ? புள்ளியை உடைய துதிக்கையைக் கொண்ட யானையாகிய கஜேந்திரன் தாமரை நிறைந்திருந்த குளத்தில் இறங்கிய போது முதலை தொடர்ந்து பிடித்த அந்த நாளில், துன்புற்று திகைத்து நின்று வரதராகிய திருமாலுக்கு அடைக்கல முறையீடுகள் செய்ய, ஒரு நொடிப் பொழுதில் வந்து அவருடைய திருக் கையில் விளங்கும் சக்கரப் படையை ஏவிய திருமாலுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய மகனே, சிவனடியார்கள், முக்தி நிலை பெற்றவர்கள், தேவர்கள், தவம் நிறை சித்தர்கள் இவர்களுடைய மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
மகரக் குழைக்குள் உந்து நயனக் கடைக்கு இலங்கு வசி அச் சரத்து இயைந்த குறியாலே ... மீன் போல் அமைந்த குண்டலங்கள் மீது தாவிப் பாயும் கடைக்கண்களில் விளங்கும் கூர்மை வாய்ந்த அந்த அம்பால் ஏற்பட்ட வடுவாலும், வட வெற்பு அதைத் துரந்து களபக் குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே ... மேரு மலையை வடக்கே (வெட்கப்பட்டு) ஓட வைத்து, சந்தனக் கலவை அணிந்த குடத்தை வெற்றி கொண்டு, செழிப்புடன் பெருத்து எழுந்த மார்பின் மேலும், மெய் உகப் பதைத்து நெஞ்சும் விரகக் கடல் பொதிந்த உலை பட்டு அலர்ச் சரங்கள் நலியாமல் ... உடல் நடுங்கிப் பதைப்புற என் மனம் காம மோகக் கடலில் ஏற்பட்ட (விரகாக்கினி) உலையில் அவதிப்பட்டு, (மன்மதனின்) மலர்ப் பாணங்கள் என்னை வேதனைப் படுத்தாமல், உலகப் புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமைப் புகழ் பகர்ந்து திரிவேனோ ... உலகத்தோரின் புகழ்க் கூச்சல் என்னும் செருக்கு நீங்க, ஞான உணர்ச்சி கொண்டு உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரிய மாட்டேனோ? புகர் கைக் கரிப் பொதிந்த முளரிக் குளத்தி(ல்) இழிந்த பொழுதில் கரத் தொடர்ந்து பிடி நாளில் ... புள்ளியை உடைய துதிக்கையைக் கொண்ட யானையாகிய கஜேந்திரன் தாமரை நிறைந்திருந்த குளத்தில் இறங்கிய போது முதலை தொடர்ந்து பிடித்த அந்த நாளில், பொருமித் திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுதக் கணத்து வந்து கையில் ஆரும் திகிரிப் படைத்துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே ... துன்புற்று திகைத்து நின்று வரதராகிய திருமாலுக்கு அடைக்கல முறையீடுகள் செய்ய, ஒரு நொடிப் பொழுதில் வந்து அவருடைய திருக் கையில் விளங்கும் சக்கரப் படையை ஏவிய திருமாலுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய மகனே, சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்று(ம்) திலதைப் பதிக்கு கந்த பெருமாளே. ... சிவனடியார்கள், முக்தி நிலை பெற்றவர்கள், தேவர்கள், தவம் நிறை சித்தர்கள் இவர்களுடைய மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.