தொக்கைக் கழுவிப் பொன் தகும் உடை
சுற்றி கலன் இட்டுக் கடி தரு
சொக்குப் புலி அப்பிப் புகழ் உறு களியாலே
சுத்தத்தை அகற்றிப் பெரியவர்
சொல் தப்பி அகத்தைப் புரி புல(ன்)
சுற்றத்துடன் உற்றுப் புவி இடை அலையாமல்
முக் குற்றம் அகற்றிப் பல கலை
கற்றுப் பிழை அற்று தன்னை உணர்
முத்தர்க்கு அடிமைப் பட்டு இலகிய அறிவாலே
முத்தித் தவ(ம்) சுற்றுக் கதி உறு
சத்தைத் தெரிசித்து கரை அகல்
முத்திப் புணரிக்குள் புக வரம் அருள்வாயே
திக்கு எட்டும் அடக்கிக் கடவுளருக்குப்
பணி கற்பித்து அருள் அறு
சித்தத்தோடு அடுத்துப் படை கொடு பொரு சூரர்
செச்சைப் புயம் அற்றுப் புக ஒரு
சத்திப் படை விட்டு சுரர் பதி
சித்த(ம்) துயர் கெட்டுப் பதி பெற அருள்வோனே
அக்கைப் புனை கொச்சைக் குற மகள்
அச்சத்தை ஒழித்து கரி வரும்
அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் அணைவோனே
அப்பைப் பிறையைக் கட்டிய சடை
அத்தர்க்கு அருமைப் புத்திர விரி
அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே.
உடலின் தோலைக் கழுவி, அழகுள்ள ஆடையைக் கட்டிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து, வாசனை வீசுகின்ற, மயக்கி வசப்படுத்தவல்ல சாந்தைப் பூசிக் கொள்பவர்களாகிய விலைமாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் மகிழ்ச்சியால், பரிசுத்தமான நிலையை நீக்கிவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதியைக் கேளாது நடந்து, பாபச் செயல்களைச் செய்யும் ஐம்புலன்கள் முதலான பல சுற்றத்தார்கள் அழைத்துச் செல்லும் வழியில் சென்று, இந்தப் பூமியில் (நான்) திரியாமல், காமம், வெகுளி, மயக்கம் எனப்படும் மூன்று குற்றங்களையும் நீக்கி, கலை நூல்கள் பலவற்றைக் கற்று, பிழையான வழிகளை நீக்கி, தன்னை அறிந்த பரிசுத்தமான ஞானிகளுக்கு அடிமை பூண்டு, (அத்தகைய ஒழுக்கத்தால்) விளக்கம் உறும் அறிவைக் கொண்டு, முக்தியை அளிக்கக் கூடிய தவ நிலையை அடைந்து, வீடு பேற்றைத் தரவல்ல சத்தியமான பொருளைத் தரிசித்து, எல்லையில்லாத முக்தி என்னும் சமுத்திரத்தில் நான் புகுமாறு வரத்தை எனக்குத் தந்து அருள்க. எட்டு திசைகளையும் அடக்கி வெற்றி கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் வேலைகளைக் கட்டளை இட்டு, கருணை என்பதே இல்லாத கடின மனத்துடன் நெருங்கிவந்து, படையைக் கொண்டு போர்க்களத்தில் சண்டை செய்யும் சூரர்களின் ரத்தத்தால் சிவந்த தோள்கள் அற்று விழும்படி ஒப்பற்ற சக்தி வேற் படையைச் செலுத்தி, தேவர்கள் தலைவனான இந்திரன் மனத் துயரத்தை நீக்கி, பொன்னுலகை மீண்டும் பெற அருளியவனே, சங்கு மாலையை அணிந்த, பாமர குலத்தவளாகிய குறப் பெண் வள்ளியின் பயத்தை நீக்கி, (கணபதியாகிய) யானை எதிரில் வந்த சிறு சந்தில் அவளைத் தன்னிடம் அழைத்து, அன்பாக அணைந்தவனே, கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் முடித்துள்ள சடைப் பெருமானாகிய சிவனுக்கு அருமைப் பிள்ளையே, விளக்கமுற்றுப் பொலியும் அத்திக்கரை என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.
தொக்கைக் கழுவிப் பொன் தகும் உடை சுற்றி ... உடலின் தோலைக் கழுவி, அழகுள்ள ஆடையைக் கட்டிக்கொண்டு, கலன் இட்டுக் கடி தரு சொக்குப் புலி அப்பிப் புகழ் உறு களியாலே ... ஆபரணங்களை அணிந்து, வாசனை வீசுகின்ற, மயக்கி வசப்படுத்தவல்ல சாந்தைப் பூசிக் கொள்பவர்களாகிய விலைமாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் மகிழ்ச்சியால், சுத்தத்தை அகற்றிப் பெரியவர் சொல் தப்பி ... பரிசுத்தமான நிலையை நீக்கிவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதியைக் கேளாது நடந்து, அகத்தைப் புரி புல(ன்) சுற்றத்துடன் உற்றுப் புவி இடை அலையாமல் ... பாபச் செயல்களைச் செய்யும் ஐம்புலன்கள் முதலான பல சுற்றத்தார்கள் அழைத்துச் செல்லும் வழியில் சென்று, இந்தப் பூமியில் (நான்) திரியாமல், முக் குற்றம் அகற்றிப் பல கலை கற்றுப் பிழை அற்று ... காமம், வெகுளி, மயக்கம் எனப்படும் மூன்று குற்றங்களையும் நீக்கி, கலை நூல்கள் பலவற்றைக் கற்று, பிழையான வழிகளை நீக்கி, தன்னை உணர் முத்தர்க்கு அடிமைப் பட்டு இலகிய அறிவாலே ... தன்னை அறிந்த பரிசுத்தமான ஞானிகளுக்கு அடிமை பூண்டு, (அத்தகைய ஒழுக்கத்தால்) விளக்கம் உறும் அறிவைக் கொண்டு, முத்தித் தவ(ம்) சுற்றுக் கதி உறு சத்தைத் தெரிசித்து ... முக்தியை அளிக்கக் கூடிய தவ நிலையை அடைந்து, வீடு பேற்றைத் தரவல்ல சத்தியமான பொருளைத் தரிசித்து, கரை அகல் முத்திப் புணரிக்குள் புக வரம் அருள்வாயே ... எல்லையில்லாத முக்தி என்னும் சமுத்திரத்தில் நான் புகுமாறு வரத்தை எனக்குத் தந்து அருள்க. திக்கு எட்டும் அடக்கிக் கடவுளருக்குப் பணி கற்பித்து ... எட்டு திசைகளையும் அடக்கி வெற்றி கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் வேலைகளைக் கட்டளை இட்டு, அருள் அறு சித்தத்தோடு அடுத்துப் படை கொடு பொரு சூரர் ... கருணை என்பதே இல்லாத கடின மனத்துடன் நெருங்கிவந்து, படையைக் கொண்டு போர்க்களத்தில் சண்டை செய்யும் சூரர்களின் செச்சைப் புயம் அற்றுப் புக ஒரு சத்திப் படை விட்டு ... ரத்தத்தால் சிவந்த தோள்கள் அற்று விழும்படி ஒப்பற்ற சக்தி வேற் படையைச் செலுத்தி, சுரர் பதி சித்த(ம்) துயர் கெட்டுப் பதி பெற அருள்வோனே ... தேவர்கள் தலைவனான இந்திரன் மனத் துயரத்தை நீக்கி, பொன்னுலகை மீண்டும் பெற அருளியவனே, அக்கைப் புனை கொச்சைக் குற மகள் அச்சத்தை ஒழித்து ... சங்கு மாலையை அணிந்த, பாமர குலத்தவளாகிய குறப் பெண் வள்ளியின் பயத்தை நீக்கி, கரி வரும் அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் அணைவோனே ... (கணபதியாகிய) யானை எதிரில் வந்த சிறு சந்தில் அவளைத் தன்னிடம் அழைத்து, அன்பாக அணைந்தவனே, அப்பைப் பிறையைக் கட்டிய சடை அத்தர்க்கு அருமைப் புத்திர ... கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் முடித்துள்ள சடைப் பெருமானாகிய சிவனுக்கு அருமைப் பிள்ளையே, விரி அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே. ... விளக்கமுற்றுப் பொலியும் அத்திக்கரை என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.