நகரம் இரு பாதமாகி மகர(ம்) வயிறாகி
மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி நதி முடி ய சாரம் ஆகி
உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழு(த்) தான
அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும்
அதனை அடியேனும் ஓதி இதய கமல ஆலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல
வேலை மீது தனி ஊரும் குழவி வடிவாகவே
நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாது தனை நாடி
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி
அரிய மணமே செய்து ஏகு அவ்வலை தேடி
அறு முக வன் மீகரான
பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே.
( நமசிவய என்னும் பஞ்சாக்ஷரத்தில்1 ந என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். ம என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். நடுவில் உள்ள சி என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். வ என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, ய என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய2 அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக. (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத) முருகன்3 தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக, சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை நீங்குமாறு, (பார்வதி தேவியும்) கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு, நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப் பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து, எல்லா உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்) உருவத்துடன் வந்து, அருமையான திருமணம் செய்து நீங்கிய அந்த வலை - தேடி யாக வந்த சிவபெருமான்தான் ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா4 மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே.
நகரம் இரு பாதமாகி மகர(ம்) வயிறாகி ... ('நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில்1 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி நதி முடி ய சாரம் ஆகி ... நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழு(த்) தான ... இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும் ... அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய2 அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அதனை அடியேனும் ஓதி இதய கமல ஆலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே ... அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக. குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல ... (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத) முருகன்3 தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக, சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை நீங்குமாறு, வேலை மீது தனி ஊரும் குழவி வடிவாகவே ... (பார்வதி தேவியும்) கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு, நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாது தனை நாடி ... நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப் பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து, அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி ... எல்லா உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்) உருவத்துடன் வந்து, அரிய மணமே செய்து ஏகு அவ்வலை தேடி ... அருமையான திருமணம் செய்து நீங்கிய அந்த 'வலை - தேடி' யாக வந்த சிவபெருமான்தான் அறு முக வன் மீகரான ... ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே. ... பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா4 மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே.