ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி
வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி
ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
ஏழும் அளவு இட்டு அருண விற்பதியில் விந்து நாத
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிகப் படிக
மோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும்
ஓது வேத சர சத்தி அடி உற்ற திரு நந்தி ஊடே
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற
மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேதவகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ்
வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள்
மாழை ரூபன் முக மத்திகை விதத்து அருண செம் கையாளி
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை
வாயின் மாது துகிர் பச்சை வடிவி சிவை என்
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலூர் தெவூர் கச்சி மதுரை பறியல்
காவை மூதூர் அருண கிரி திருத்தணியல் செந்தில் நாகை
காழி வேளூர் பழநிக்கிரி குறுக்கை திரு
நாவலூர் திருவெ(ண்)ணெய் பதியில் மிக்க திகழ்
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே.
திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம்,
ஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள் எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக. குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி, பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது, பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள், என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே, காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும், (மேலும்) உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே.