சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
திருக்குறுந் தாண்டகம் - திருக்குறுந் தாண்டகம்  

Songs from 2032.0 to 2051.0   ( )
திருக்குறுந் தாண்டகம் (2032.0)    
நிதியினை பவளத் தூணை
      நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாளக்
      கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
      வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
      தொண்டனேன்-விடுகிலேனே



[2032.0]
Go to Top
காற்றினை புனலை தீயை
      கடிமதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய
      எழில் மணித் திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை
      அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம்
      கூறு-நீ கூறுமாறே



[2033.0]
பா இரும் பரவை-தன்னுள்
      பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட
      அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து
      விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய
      மைந்தனை-வணங்கினேனே



[2034.0]
கேட்க யான் உற்றது உண்டு
      கேழல் ஆய் உலகம் கொண்ட
பூக் கெழு வண்ணனாரைப்
      போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம்-தன்னால்
      மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி
      விழுங்கினேற்கு இனியவாறே



[2035.0]
இரும்பு அனன்று உண்ட நீர்போல்
      எம் பெருமானுக்கு என்-தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
      அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை
      மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போலப்
      பருகினேற்கு இனியவாறே



[2036.0]
Go to Top
மூவரில் முதல்வன் ஆய
      ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய
      குரு மணித் திரளை இன்பப்
பாவினை பச்சைத் தேனை
      பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர்
      என் சொல்லிப் புகழ்வர் தாமே?



[2037.0]
இம்மையை மறுமை-தன்னை
      எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
      வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
      திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
      தலைமிசை மன்னுவாரே



[2038.0]
வானிடைப் புயலை மாலை
      வரையிடைப் பிரசம் ஈன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றை
      திருவினை மருவி வாழார்-
மானிடப் பிறவி அந்தோ
      மதிக்கிலர் கொள்க-தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு
      உறுதியே வேண்டினாரே



[2039.0]
உள்ளமோ ஒன்றில் நில்லாது
      ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
      குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
      தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
      எழுமையும் துணை இலோமே



[2040.0]
Go to Top
சித்தமும் செவ்வை நில்லாது
      என் செய்கேன் தீவினையேன்?
பத்திமைக்கு அன்பு உடையேன்
      ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே
      முழங்கு ஒளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால்
      யாதும் ஒன்று அறிகிலேனே



[2041.0]
தொண்டு எல்லாம் பரவி நின்னைத்
      தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான்
      ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும்
      ஆதி ஆய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி
      நின்னையே பரவுவேனே



[2042.0]
ஆவியை அரங்க மாலை
      அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மை இல் தொண்டனேன் நான்
      சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறு என்று
      அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவிபோல் வண்ணர் வந்து என்
      கண்ணுளே தோன்றினாரே



[2043.0]
இரும்பு அனன்று உண்ட நீரும்
      போதரும் கொள்க என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம்
      அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
      அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
      கண்-இணை களிக்குமாறே



[2044.0]
Go to Top
காவியை வென்ற கண்ணார்
      கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி
      அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும்
      சூழ் புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது
      பாவியேன் ஆயினேனே



[2045.0]
முன் பொலா இராவணன்-தன்
      முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
      அடி-இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு
      என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு
      ஆட்டுவன் அடியனேனே



[2046.0]
மாய மான் மாயச் செற்று
      மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
      தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
      என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
      சூட்டுவன் தொண்டனேனே



[2047.0]
பேசினார் பிறவி நீத்தார்-
      பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார்
      என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
      பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க-
      அலை கடல் வண்ணர்பாலே



[2048.0]
Go to Top
இளைப்பினை இயக்கம் நீக்கி
      இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி
      அன்பு அவர்கண்ணே வைத்து
துளக்கம் இல் சிந்தைசெய்து
      தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
      மெய்ம்மையைக் காண்கிற்பாரே?



[2049.0]
பிண்டி ஆர் மண்டை ஏந்தி
      பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த
      ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
      கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
      மற்றையார்க்கு உய்யல் ஆமே?



[2050.0]
வானவர்-தங்கள்-கோனும்
      மலர்மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும்
      சேவடிச் செங் கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன
      வண் தமிழ்-மாலை நாலைந்து
ஊனம்-அது இன்றி வல்லார்
      ஒளி விசும்பு ஆள்வர் தாமே



[2051.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham chapter