சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann வெள்ளம் தாழ் விரி சடையாய்!
8.105.03   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30) வெள்ளம் தாழ் விரி சடையாய்!
பண் - வெள்ளம் தாழ் விரி சடையாய்!   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/05.03 Suttaruthal Thiruvasagam.mp3
வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!விண்ணோர்
பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;
கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.

[21]
வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான்
வினைக்கேடன்' என்பாய் போல,
இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை
ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை
அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;
முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு?
முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!

[22]
ஆய நான்மறையவனும் நீயே ஆதல்
அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்,
நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய்
அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர்
பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே!
எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே?

[23]
பேசில், தாம் ஈசனே, எந்தாய், எந்தை
பெருமானே!' என்று என்றே பேசிப் பேசி;
பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி;
போற்றி எம்பெருமானே!' என்று; பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை,
மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ!
என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?

[24]
வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று;
அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு
எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்
எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன்
வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி,
மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை,
திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;
எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?

[25]
சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன்
கண் இணை நின் திருப்பாதப் போதுக்குஆக்கி,
வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன்
மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்து, எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெரும் கடலே!மலையே! உன்னைத்
தந்தனை செம் தாமரைக் காடு அனைய மேனித்
தனிச் சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே.

[26]
தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி,
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை,
முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்
கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

[27]
கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்;
கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே!

[28]
விச்சை தான் இது ஒப்பது உண்டோ? கேட்கின்
மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி,
அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்புகூர;
அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம், ஆகி,
ஆர் அழல் ஆய், அந்தம் ஆய், அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி, எங்கள்
சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே!

[29]
தேவர் கோ அறியாத தேவ தேவன்;
செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி;
மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;
யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்;
யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்;
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு;
மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

[30]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000