சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
1.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=70GGL3BPf4w
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo
7.079   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மானும், மரை இனமும், மயில்
பண் - நட்டபாடை   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DlIzx0Fux38

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.118   சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு பருப்பதமங்கையம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

[1]
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே!
வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி,
பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

[2]
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால்
இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்!
கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும்,
பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.

[3]
கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்,
எங்கள் நோய் அகல நின்றான் என, அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த
பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.

[4]
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி,
மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த,
சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா,
பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

[5]
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

[6]
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ,
தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற,
விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்-
படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே.

[7]
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே
மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை,
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்-
பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

[8]
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,-
திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்,
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

[9]
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

[10]
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,
பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல
ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.058   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[1]
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[2]
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[3]
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[4]
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.

[5]
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.

[6]
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.

[7]
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.

[8]
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

[9]
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.079   மானும், மரை இனமும், மயில்  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு பருவதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பருவதநாதர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி,
பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு,
தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.

[1]
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள்
மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை
அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து,
திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே.

[2]
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க,
கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய,
என்னைக் கிளி மதியாது என எடுத்துக் கவண் ஒலிப்ப,
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.

[3]
மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச்
செவ்வே திரிந்து, ஆயோ! எனப் போகாவிட, விளிந்து,
கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச்
செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே.

[4]
ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய,
தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி,
மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி,
தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே.

[5]
மாற்றுக் களிறு அடைந்தாய் என்று மதவேழம் கை எடுத்து,
மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய,
தூற்றத் தரிக்கில்லேன் என்று சொல்லி(ய்) அயல் அறியத்
தேற்றிச் சென்று, பிடி சூள் அறும் சீ பர்ப்பத மலையே.

[6]
அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்;
எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ?
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி, அக் கிளியைச்
செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.

[7]
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை
அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்;
கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத்
திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே.

[8]
ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற,
ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும்,
மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம்,
தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே.

[9]
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை
அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000