சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q |
4.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் பண் - திருநேரிசை:காந்தாரம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI |
4.058
திருநாவுக்கரசர்
தேவாரம்
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.054  
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ, புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள் அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித் திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! | [1] |
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக் கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்; ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம் செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே! | [2] |
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை, அப்பர் போல் ஐவர் வந்து(வ்), அது தருக, இது விடு! என்று(வ்) ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்- செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே! | [3] |
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி, நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும் அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும் செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! | [4] |
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி, களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும் தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம் தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! | [5] |
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும் நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம் செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! | [6] |
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்; வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்- பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள் தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே! | [7] |
நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி, ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்), ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற, தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே. | [8] |
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால; செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே! | [9] |
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும், இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன் கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத் திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.056  
மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்; பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்; காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்- ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே. | [1] |
மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்; குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்; கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்; அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே. | [2] |
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்; செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்; கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும் அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே. | [3] |
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்; எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்; தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே. | [4] |
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்; கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்; வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர் அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே. | [5] |
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச் சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்; துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்; அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே. | [6] |
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்; படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்; உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே. | [7] |
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த; நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப; சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே. | [8] |
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும், தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும், தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்; ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே. | [9] |
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்; ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்; கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.058  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்), ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும் பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே. | [1] |
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார் வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த, முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப் பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே. | [2] |
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும் இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி, பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே. | [3] |
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி, சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி, விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே. | [4] |
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி, உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே. | [5] |
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்; காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே. | [6] |
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த, காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி, பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே. | [7] |
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்; கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி, சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே. | [8] |
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்! செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர் பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே. | [9] |
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி, கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம் சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி, படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே. | [10] |