சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=VWYHKdcEfME |
5.079
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள் எருக்கு அரவம் விரவும் பண் - திருக்குறுந்தொகை (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=G6TTQDrlJCU |
6.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு பண் - திருத்தாண்டகம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mpXiqrBMFK4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.043  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி )
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம், உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர் புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே. | [1] |
தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும் ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும் இடம் மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து, பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. | [2] |
வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ, ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம் யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும் ஒழியாமே, பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே. | [3] |
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே. | [4] |
கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக, போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. | [5] |
திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே, அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப் புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே. | [6] |
அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி, பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து, புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே. | [7] |
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம் எண் இன்றி முக்கோடிவாணாள் அது உடையானைப் புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே. | [8] |
வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச் சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம் ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும் போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே. | [9] |
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும் இடம் விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று, இராமற்காப் புடைத்து அவனைப் பொருது அழித்தான் ள்ளிருக்குவேளூரே. | [10] |
செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து ஆவான், பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை, கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.079  
வெள் எருக்கு அரவம் விரவும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி )
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப் புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர், நள் இருப்பர், நரகக்குழியிலே. | [1] |
மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க் கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே, போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர், சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே! | [2] |
அருமறையனை, ஆணொடு பெண்ணனை, கருவிடம் மிக உண்ட எம் கண்டனை, புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர், உருகி நைபவர் உள்ளம் குளிருமே. | [3] |
தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை, பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே. | [4] |
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர் பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர் மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே. | [5] |
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால் செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை, புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே. | [6] |
கையினோடு கால் கட்டி, உமர் எலாம், ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர், பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர், மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே! | [7] |
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று, மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே; புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே! | [8] |
அரக்கனார் தலைபத்தும் அழிதர நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே. | [9] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.054  
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி )
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [1] |
சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை, கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப் போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [2] |
பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை; எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என் உள்ளத்துள்ளே ஊறும் அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும் தீம் கரும்பை; அரனை; ஆதிப்- புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [3] |
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [4] |
மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்- தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப் பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [5] |
அறை ஆர் பொன்கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன் தன்னை, கறை ஆர் மூ இலை நெடுவேல் கடவுள் தன்னை, கடல் நாகைக்காரோணம் கருதினானை, இறையானை, என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற பொறையானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [6] |
நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற விருப்பவனை, வேதியனை, வேதவித்தை, வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இருப்பவனை, இடை மருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும் பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [7] |
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு இலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [8] |
பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர் சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை, நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால் மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள் கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும் புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [9] |
இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை; அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை; கனல், மழுவும், கலையும், அங்கை பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [10] |