சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
திருவிசைப்பா

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.008   கருவூர்த் தேவர் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=XZgRc-KQQj4
Audio: https://www.youtube.com/watch?v=cmhzbUZw00Q
Audio: https://www.youtube.com/watch?v=lfEUHwMrcJw

9.008 கருவூர்த் தேவர் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
    கறையணல் கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
    பாம்பணி பரமர்தம் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்
    மழைதவழ் வளரிளம் கமுகம்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[1]
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்
    ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை என்றால்
    அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
    கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[2]
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்
    தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
    நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர
    வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[3]
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
    தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
    நடம்புரி பரமர்தம் கோயில்
அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த
    அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[4]
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
    களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
    என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
    பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[5]
நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும்
    நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும்
    விரிசடை அடிகள்தங் கோயில்
அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து)
    அகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[6]
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
    புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்
    தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து
    நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[7]
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
    திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும்
    புணர்ப்புடை அடிகள்தம் கோயில்
ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும்
    அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[8]
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
    பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
    அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
    பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[9]
உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்
    ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)
எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்
    இருட் பிழம்(பு) அறஎறி கோயில்
வம்புலாம் கோயில் கோபுரம் கூடம்
    வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[10]
இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)
    எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்
    துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்
    பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்
செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.009   கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம்  
பண் -   (திருத்தலம் திருக்களந்தை ஆதித்தேச்சரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=aMlLcb0dmZQ
Audio: https://www.youtube.com/watch?v=k1pxoi9NOaw
Audio: https://www.youtube.com/watch?v=r1WyYpeVN_0
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
    கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
    முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
    மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[1]
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
    தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய
    திருநுதலவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)
    எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[2]
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால்
    கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ்
    முறைதெரிந்(து) ஓருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
    இறைவரே மறைகளும் தேட
அரியரே யாகில் அவரிடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[3]
பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு)
    அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப்
    பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தெந் குடிமுழு தாளும்
    குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே யாகில் அவரிடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[4]
பவளமே மகுடம் பவளமே திருவாய்
    பவளமே திருவுடம்(பு) அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
    தவளமே முறுவல்ஆ டரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால்
    துடியிடை இடமருங்(கு) ஒருத்தி
அவளுமே ஆகில் அவரிடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[5]
நீலமே கண்டம் பவளமே திருவாய்
    நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
    பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று
    குழைவரே கண்டவர் உண்டது
ஆலமே ஆகில் அவரிடங் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே !
[6]
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும்
    திறத்தவர் புறத்திருந்(து) அலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
    மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே
    புரியவும் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவரிடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[7]
மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான
    விளக்கரே எழுதுகோல் வளையாள்
மையரே வையம் பலிதிரிந்(து) உறையும்
    மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்
    பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடங் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[8]
குமுதமே திருவாய் குவளையே களமும்
    குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
    மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
    கனகமே திருவடி நிலைநீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
[9]
நீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை
    நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலைமேல்
    நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
    அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்
    இருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே.
[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.010   கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்  
பண் -   (திருத்தலம் திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=ILbJm35Oup8
Audio: https://www.youtube.com/watch?v=TtbOf6ybRpU
Audio: https://www.youtube.com/watch?v=lfcHFrSu3QA
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்
    சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்
    திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும்
    மைந்தன்என் மனங்கலந் தானே.
[1]
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
    சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
    கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தன்என் மனங்கலந் தானே.
[2]
திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
    திலகமும் உடையவன் சடைமேல்
புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப்
    போய்வருந் தும்பிகாள் ! இங்கே
கிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என்
    மனத்தையும் கொண்டுபோ துமினே.
[3]
தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்
    செவியவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
    விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தனே !என்னும்என் மனனே.
[4]
தோழி !யாம்செய்த தொழில்என் எம்பெருமான்
    துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
    நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்
கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
    மயங்கவும் மாலொழி யோமே.
[5]
என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய்
    இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
    அலமரு மாறுகண்(டு) அயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவஓ என்று
    மயங்குவன் மாலையம் பொழுதே.
[6]
தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்
    சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
    குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே.
[7]
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
    தமருகம் திருவடி திருநீறு
இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி
    இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.
[8]
யாதுநீ நினைவ(து) எவரையாம் உடையது
    எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
    பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
    கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தன்என் மனம்புகுந் தானே.
[9]
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
    அழகிய சடையும்வெண் ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்;
    செய்வதென் தெளிபுனல் அலங்கல்
கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்
    கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தனே அறியும்என் மனமே.
[10]
கித்திநின் றாடும் அரிவையர் தெருவில்
    கெழுவுகம் பலைசெய்க்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
    பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்
முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல்
    முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே.
   
[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.011   கருவூர்த் தேவர் - திருமுகத்தலை  
பண் -   (திருத்தலம் திருமுகத்தலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Gup4ww8reMY
Audio: https://www.youtube.com/watch?v=QMf4m1tj358
Audio: https://www.youtube.com/watch?v=ztZoQZuQO-Q
புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே
    பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
    பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்
    அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
    தனியனேன் தனிமைநீங் குதற்கே.
[1]
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து
    புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
    வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்
    முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
    வெள்ளமாய் உள்ளமா யினையே.
[2]
கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்
    கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்
    முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே !
    பாவியேன் ஆவியுள் புகுந்த(து)
என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு
    எளிமையோ பெருமையா வதுவே.
[3]
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்
    கிடையனா ருடையஎன் நெஞ்சில்
பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்
    பரமனே ! பன்னகா பரணா !
மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து
    மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்
    நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !
[4]
அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)
    ஐவரோ(டு) என்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)
    என்னைஆள் ஆண்டநாய கனே !
முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச
    முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்
    பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
[5]
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
    பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
    மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !
    முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
    விழுமிய விமானமா யினதே.
[6]
விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்
    வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்
    கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
    முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
    பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.
[7]
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)
    என்பெலாம் உருகநீ எளிவந்(து)
உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்
    ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
    முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
    கனியுமாய் இனியை ஆயினையே.
[8]
அம்பரா அனலா; அனிலமே புவிநீ
    அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
    ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
    முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே
    எந்தையும் தாயுமா யினையே.
[9]
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
    முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய
பாலுமாய், அமுதாம் பன்னகா பரணன்
    பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலையம் பாகின் அனையசொற் கருவூர்
    அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
    சிவபதம் குறுகிநின் றாரே.
   
[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.012   கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்  
பண் -   (திருத்தலம் பொது -திரைலோக்கிய சுந்தரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=HOLFzgY4IKs
Audio: https://www.youtube.com/watch?v=Iqo6harvYXs
Audio: https://www.youtube.com/watch?v=dLve31rr8K4
நீரோங்கி வளர்கமல
    நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
    அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
    உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
[1]
நையாத மனத்தினனை
    நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
    அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
    கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
[2]
அம்பளிங்கு பகலோன்பால்
    அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
    முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !
    என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
[3]
மைஞ்ஞின்ற குழலாள்தன்
    மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
    இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
    மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[4]
நீவாரா(து) ஒழிந்தாலும்
    நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
    குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய்
    அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[5]
முழுவதும்நீ ஆயினும் இம்
    மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
    பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
    அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[6]
தன்சோதி எழுமேனித்
    தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
    ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
    துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[7]
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
    ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
    நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
    நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[8]
ஆறாத பேரன்பின்
    அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
    வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
    பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[9]
சரிந்ததுகில் தளர்ந்தஇடை
    அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
    இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம்
    முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[10]
ஆரணத்தேன் பருகிஅருந்
    தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
    கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
    போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.013   கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்  
பண் -   (திருத்தலம் கங்கைகொண்ட சோழீசுவரர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=AvqvojcfoIQ
Audio: https://www.youtube.com/watch?v=N_W3TbOpdew
Audio: https://www.youtube.com/watch?v=YHzpRKTTm9g
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[1]
உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா !
    ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்
மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை
    மழலையஞ் சிலம்படி முடிமேல்
பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும்
    பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[2]
அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே
    அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்
    தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
    பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[3]
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
    அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
    தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
    முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே !
[4]
கருதிவா னவனாம் திருநெடு மாலாம்
    சுந்தர விசும்பின்இந் திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கண்
    பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த
    ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[5]
அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்
    அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்
உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்
    உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்
    குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே !
[6]
மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த
    முழுமணித் திரள்அமு(து) ஆங்கே
தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய
    தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே
    நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[7]
தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
    தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)
அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)
    அமருல(கு) அளிக்கும்நின் பெருமை
பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்
    பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல்வைத்த கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[8]
பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்
    பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்
    புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
    நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்
கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.
[9]
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய
   அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
   உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்
   கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.
[10]
மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
   வளர்இளந் திங்களை முடிமேல்
கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
   அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து
   திளைப்பதும் சிவனருட் கடலே.
   
[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.014   கருவூர்த் தேவர் - திருப்பூவணம்  
பண் -   (திருத்தலம் திருப்பூவணம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=6QBBq14pKL8
Audio: https://www.youtube.com/watch?v=Ud-ZNyN5-HE
Audio: https://www.youtube.com/watch?v=ZQv-CQsO9nw
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
   சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
   பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
   வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[1]
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
   பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
   எளிமையை என்றும் நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
   தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[2]
கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில்
   கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள்
   இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
   வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[3]
கண்ணியல் மணியின் சூழல்புக்(கு) அங்கே
   கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
   நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்
   வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[4]
கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்
   கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்
   அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க
   நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்
புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்
   பூவணங் கோயில் கொண் டாயே.
[5]
செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன்
   சேவடி பார்த்திருந்(து) அலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்
   என்னுடை அடிமைதான் யாதே
அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
   அரிவையர் அவிழ்குழல் கரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[6]
சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்
   சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
   கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
   விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
 
[7]
இப்பாடல் கிடைக்கவில்லை.
[8]
இப்பாடல் கிடைக்கவில்லை.
[9]
பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட
   புனிதனை வனிதைபா கனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
   குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் தன்னைச் செழுமறை தெரியும்
   திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
   பரமனது உருவமா குவரே.
   
[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.015   கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி  
பண் -   (திருத்தலம் திருச்சாட்டியக்குடி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=VPqqFCCIuUI
Audio: https://www.youtube.com/watch?v=kx4xr42RA_U
Audio: https://www.youtube.com/watch?v=sCXf_OLKQ-g
பெரியவா கருணை இளநிலா எறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து
சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால்
   தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
[1]
பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம்
   பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்
வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை
   மலைமகள் மகிழ்பெரும் தேவி
சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம்
   சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ்
   இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
[2]
தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்
   தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை
   கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
   செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்
   இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
[3]
பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்
   பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்
   கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
   தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
[4]
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
   திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
   மலையுடை அரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
   தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
[5]
அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
   அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்
கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன்
   களைகணே, களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
   சைவனே சாட்டியக் குடியார்க்(கு)
இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ்
   இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.
[6]
செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
   அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
   சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.
[7]
செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி !
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
   அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்
   சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை
   இறைவனே ! போற்றியே போற்றி !
[8]
சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் !
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !
   அமரர்கள் அதிபனே ! அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
   சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !
   முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே.
[9]
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
   தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை
   இருந்தவன் திருவடி மலர்மேல்
காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்
   கழறுசொல் மாலைஈர் ஐந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே
   வளரொளி விளங்குவா னுலகே.
   
[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.016   கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்  
பண் -   (திருத்தலம் தஞ்சை இராசராசேச்சரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=3QkwBkLEPRI
Audio: https://www.youtube.com/watch?v=V-ixoubde1s
Audio: https://www.youtube.com/watch?v=lJkd2SjcZic
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி
   ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !
   அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
   பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
[1]
நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா
   நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
   புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்
   றிடுபுனல் மதகில்வாழ் முதலை
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[2]
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து
   உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[3]
வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்
   வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்
   சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளிர்
   கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[4]
எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்
   ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை
   அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
   உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[5]
அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள
   அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
   குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்
   தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[6]
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
   தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும்
   நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னோ
கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்
   சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[7]
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
   தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
   எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்
   விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[8]
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
   வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்
   அலர்கதிர் அனையர் வாழியரோ !
பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில்
   புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[9]
தனியர்எத் தனைஓ ராயிர வருமாம்
   தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்
   கட்டியர் அட்டஆ ரமிர்தர்
புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்
   புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[10]
சரளமந் தார சண்பக வகுள
   சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
   அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
   பொன்நெடுங் குன்றுடை யோரே.
   
[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.017   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்  
பண் -   (திருத்தலம் திருவிடைமருதூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=72wWKXEJYNI
Audio: https://www.youtube.com/watch?v=CNR6EfO6BsM
Audio: https://www.youtube.com/watch?v=N292LbzzmJI
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
   வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து
   பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின்
   அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்
   மருவிடம் திருவிடை மருதே.
[1]
இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
   இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
   அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
   சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
   மருவிடம் திருவிடை மருதே.
[2]
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
   பல்லவம் வல்லியென்(று) இங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
   வீங்குல(கு) ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமகள் உடனாய்த்
   தூங்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை அணுகி நுணிகியுள் கலந்தோன்
   மருவிடம் திருவிடைமருதே.
[3]
அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்கு
   அடியனேன் உள்கலந்து அடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
   படர்சடை விடம்மிடற்(று) அடிகள்
துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை
   சுடர்உமிழ் தரஅதன் அருகே
மணியுமிழ் நாக மணியுமிழ்ந்(து) இமைப்ப
   மருவிடம் திருவிடைமருதே.
[4]
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல்
   படிவழி சென்று சென்றேறிச்
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி
   தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன்
   எண்ணில்பல் லூழிகள் உடனாய்
வந்தணு காது நுணிகியுள் கலந்தோன்
   மருவிடம் திருவிடைமருதே.
[5]
எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு)
   ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும்
   தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்ப
   அந்திபோன்(று) ஒளிர்திரு மேனி
வரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான்
   மருவிடம் திருவிடைமருதே.
[6]
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
   இன்துளி படநனைந்(து) உருகி
அழலையாழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு
   ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம்
   தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
   மருவிடம் திருவிடை மருதே.
[7]
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார்
   மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
   விழுமியோன் முன்புபின்(பு) என்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
   நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்
   மருவிடம் திருவிடை மருதே.
[8]
கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக்
   கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலம் கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த
   நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே ! என்று நின்(று) உருகிப்
   புலம்புவார் அவம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான்
   மருவிடம் திருவிடைமருதே.
[9]
ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
   உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம்
   கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
   தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன்
   மருவிடம் திருவிடைமருதே.
   
[10]

This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool author %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D book name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+ lang tamil