கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத்(து) அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
1
|
சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய திருநுதலவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு) எரிவதொத்(து) எழுநிலை மாடம் அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
2
|
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால் கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ் முறைதெரிந்(து) ஓருடம் பினராம் இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளும் தேட அரியரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
3
|
பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு) அரியரே பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும் குழையராய் வந்தெந் குடிமுழு தாளும் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
4
|
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்(பு) அதனில் தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல்ஆ டரவம் துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்(கு) ஒருத்தி அவளுமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
5
|
Go to top |
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்திலங் கினவே போலுமே முறுவல் நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டது ஆலமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே ! |
6
|
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும் திறத்தவர் புறத்திருந்(து) அலச மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே புரியவும் வல்லரே எல்லே அக்கடா ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
7
|
மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாள் மையரே வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே உளங்கலந் திருந்தும் பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
8
|
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒருபால் விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம் கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலைநீர் அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. |
9
|
நீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து நாரணன் பரவும் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர் ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலை ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர் இருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே. |
10
|
Go to top |