கடவுள் வாழ்த்து
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
|
1
|
நுதலிய பொருள்
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
|
2
|
நூற் சிறப்பு
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும் பக்கம்நின் றார்அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.
|
3
|
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
|
4
|
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை யாகும் சராசரத் தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
|
5
|
Go to top |
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
|
6
|
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன் நந்தி அருளாலே மூலனை நாடினேன் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
|
7
|
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ டிந்த எழுவரும் என்வழி யாமே.
|
8
|
நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள் நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென நால்வரும் தேவராய் நாதரா னார்களே.
|
9
|
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன் கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
|
10
|
Go to top |
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.
|
11
|
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய் நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.
|
12
|
செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.
|
13
|
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே பொருந்திய செல்வப் புவனா பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
|
14
|
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.
|
15
|
Go to top |
மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
|
16
|
நேரிழை யாவாள் நிரதி சயானந்தப் பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள் சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.
|
17
|
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
|
18
|
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.
|
19
|
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
|
20
|
Go to top |
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
|
21
|
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப் பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால் ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.
|
22
|
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.
|
23
|
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
|
24
|
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.
|
25
|
Go to top |
அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான் எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும் தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம் பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.
|
26
|
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
|
27
|
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.
|
28
|
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவ னாயினேன் நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான்இருந் தேனே.
|
29
|
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.
|
30
|
Go to top |
பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும் உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.
|
31
|
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும் பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
|
32
|
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன் ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன் நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
|
33
|
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப் பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலும் ஆமே.
|
34
|
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக் கிருந்த முனிவருந் தேவரும் ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் பத்திமை யால்இப் பயன்அறி யாரே.
|
35
|
Go to top |
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.
|
36
|
வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தரும்இவை தானே.
|
37
|
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத் தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.
|
38
|
கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் புலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.
|
39
|