சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு அர்த்தநாரீசுவரி உடனுறை அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY   Add audio link Add Audio

வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
1
விரிக்கப் பெற்ற பூணுநூல் திகழும் திருமார் பினனாய் நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

2
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும் சடையின்கண் அணிந்து தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும் மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.

பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.

3
பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப்புனைந்த கையினளாய் மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.

வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.

4
கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.

பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.

5
திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப்பொருளாகும்.
Go to top

ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.

6
மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு பிறையையும் சடையின்கண் அணிந்து தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.

நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.

7
கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய் வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.

மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,
கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

8
செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இள மதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேர நெருங்கச்சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.

செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.

9
சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத்திரள்போல ஒளி வடிவினனாய் ஓங்கி நின்ற மூலகாரணனும் கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.

10
போதி மரத்தை வழிபடும் புத்தர் அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக் காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே! இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.
Go to top

அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

11
அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன் கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய நலம் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
1.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண் நீறு அணிந்து,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000