நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த படை மரு தழல் எழ மழு வல பகவன், புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய, இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.
|
1
|
இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித்தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருதமரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத்தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும். | |
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்; குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர் இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.
|
2
|
மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசைவற்றிய தலையோடு ஆகியவற்றையும் மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும் குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திருவிடைமருதூராகும். | |
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன், கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன், பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின் இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.
|
3
|
அன்பில்லாதவர்க்கு அரியவனும் அன்புடை அடியவர்க்கு எளியவனும் அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும் பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும் சிறியன யாவற்றினும் சிறியவனும் தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும். | |
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன், வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர் எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.
|
4
|
நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும் கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும். | |
வரு நல மயில் அன மடநடை மலைமகள் பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான், செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர் இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.
|
5
|
அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மட நடையினளாகிய மலையரையன் மகளும் பெருநல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதனபாரங்களைக் கூடியவனும் போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும். | |
| Go to top |
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை, மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்; விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு இலை உடை படையவன்; இடம் இடைமருதே.
|
6
|
மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மட மகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும். | |
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி, குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.
|
7
|
இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருதவாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க. | |
மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு துறையவன் என வல அடியவர் துயர் இலர்; கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.
|
8
|
வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும் திங்களாகத் திகழ்பவனும் அறிவொடுபட்ட கலைத்துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும். | |
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும் இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக் கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.
|
9
|
மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும் பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும். | |
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும் அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல் கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு- மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.
|
10
|
துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும். | |
| Go to top |
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன், இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த, படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.
|
11
|
நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர். | |