சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவிடைமருதூர் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=cTl52pwVSrY   Add audio link Add Audio

விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

1
விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடை யினரும் வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடை யினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ்மிக உளதாகும்.

மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர்
எறிதிரை கரை பொரும் இடைமருது எனுமவர்
செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்;
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.

2
சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும் காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம் மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.

சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்
நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,
இலர் என இடு பலியவர், இடைமருதினை
வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.

3
சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும் மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும் நிறைவான வேதங்களை மொழிபவரும் உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.

விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை தொறு, பலி இடுக! என முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்
உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.

4
விடையூர்தியை உடையவரும் வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக்கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும் ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும் இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.

உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,
அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை
இரை மரும் அரவினர், இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.

5
சொல்லுதற்கரிய அழகரும் உணர்வதற்கரிய தன்மையரும் இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.
Go to top

ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்
எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

6
வழிந்தொழுகும் கங்கை நதி இளம்பிறை பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும் ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித்தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.

கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,
இலை மலி படையவர், இடம் இடைமருதே.

7
வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும் கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும் கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும் இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.

செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்
அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,
இருவகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?

8
போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.

அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

9
திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காண முயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சிதந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.

குடை மயிலின தழை மருவிய உருவினர்,
உடை மரு துவரினர், பல சொல உறவு இலை;
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடை மருது என மனம் நினைவதும் எழிலே.

10
குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும் மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள்யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப்பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத்தரும்.
Go to top

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.

11
கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப்பதியில் தோன்றியவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிடைமருதூர்
1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
Tune - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு உடைச் சுடலை நீற்றார்;
Tune - திருநேரிசை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப்படை உடையார் தாமே போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
7.060   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கழுதை குங்குமம் தான் சுமந்து
Tune - தக்கேசி   (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
9.017   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune -   (திருவிடைமருதூர் )
11.028   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவிடைமருதூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000