மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர் முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.
|
1
|
மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள் எண் குணங்கள் எல்லோராலும் விரும்பப்பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும் அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும் பளிங்கு போன்றவனும் உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும் ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர் தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக்கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும். | |
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி, மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.
|
2
|
தேன் மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மை யோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில் மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும் உதிர்த்து நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும். | |
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி, மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில் கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குலை கொள்சோலை, முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.
|
3
|
தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன் இந்திரன் எச்சன் சூரியன் அனலோன் பிரமன் முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில் இனிய மாங்கனிகள் வளமான பலாக்கனிகள் வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும் குலைகளையுடைய கமுகு தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும். | |
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள், செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக, மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக, மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.
|
4
|
கொடுமை மிகுந்து முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும் பிரமனும் இந்திரனும் திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட தேவர்களைத் தேராகவும் மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமால் அனலோன் வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்ததலைவனாகிய சிவபிரானது இடம் திருமுதுகுன்றமாகும். | |
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின் முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.
|
5
|
மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும் அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒருபாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம் ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி மழை வருதலைக் கண்டு அஞ்சித்தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும் பெரியயானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும். | |
| Go to top |
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி, தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து, முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.
|
6
|
சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலை மாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம் நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல் கழுநீர் குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும். | |
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட, நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே.
|
7
|
அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவ பிரானது கோயில் முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப்பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரிமணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும். | |
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும் பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று, மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.
|
8
|
கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும் வாயும் ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாயமலையை நிலைபெயர்த்த காலத்து மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத்தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும். | |
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத் தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.
|
9
|
தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும் அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும் அன்னமாகவும் பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும் நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும். | |
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்! ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.
|
10
|
உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும் விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும் நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும் நான்மறைகளை உணர்ந்தவர்களும் ஐம்புலன்களை வென்ற மௌனிகளும் முனிவர்களாகிய செல்வர்களும் தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து தொண்டர்களே! உய்வீர்களாக. | |
| Go to top |
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு, தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.
|
11
|
ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப்பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம் பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர். | |
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|