வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த, கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள், அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.
|
1
|
அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும் விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும். | |
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச் சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம் குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம், திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
|
2
|
வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா கடம்ப மரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும். | |
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து, பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம், விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்- திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
|
3
|
வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து உமையம்மையை விரும்பியேற்று சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக் கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும் என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும். | |
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து, காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம், மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள், ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
|
4
|
மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த நம் இடர் கெடும். | |
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து, பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ, வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
|
5
|
அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான் மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பலசூழப் புலால்வற்றிய வெண்தலையோட்டையும் அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க நம் இடர் கெடும். | |
| Go to top |
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய எய்து, ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து, மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள், ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.
|
6
|
மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும் முப்புரிநூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும் பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும். | |
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து, நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து, ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர், சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.
|
7
|
ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும். | |
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான், அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம், கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள், மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.
|
8
|
பிரமனும் திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும் பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும். | |
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும் மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்! விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக் கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.
|
9
|
பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண நம் இடர் கெடும். | |
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை, காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள், பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார், சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.
|
10
|
அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர். | |
| Go to top |